கோவை-திருப்பூர் வாலிபர்களை ஐ.எஸ். பயங்கரவாத ஆதரவாளர்களாக மாற்ற திட்டம்- என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல்கள்
- என்.ஜ.ஏ. அதிகாரிகள் அப்துல் பாசித்தை கைது செய்தனர்.
- அப்துல் பாசித் கோவை மற்றும் திருப்பூர் ஆகிய இடங்களுக்கு அடிக்கடி சென்று அங்கு தங்கி இருந்து அப்பகுதியைச் சேர்ந்த வாலிபர்களை மூளைச்சலவை செய்தது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது
சென்னை:
சென்னை, மயிலாடுதுறை உட்பட பல இடங்களில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்துக்கு ஆதரவாக செயல்பட்டவர்களின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது.
இதில் மயிலாடுதுறையை சேர்ந்த அப்துல் பாசித் என்பவர் சென்னை புரசைவாக்கத்தில் உள்ள ஆம்புலன்ஸ் நிறுவனத்தில் டிரைவராக வேலை செய்து வந்தது தெரிய வந்தது. ஐஎஸ் இயக்கத்திற்கு ஏற்கனவே ஆள்களை திரட்டிய இவர், வயதான நிலையில் மீண்டும் அதுபோன்ற செயலில் ஈடுபட்டு வருவது கண்டுபிடிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து என்.ஜ.ஏ. அதிகாரிகள் அப்துல் பாசித்தை கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
அப்துல் பாசித் கோவை மற்றும் திருப்பூர் ஆகிய இடங்களுக்கு அடிக்கடி சென்று அங்கு தங்கி இருந்து அப்பகுதியைச் சேர்ந்த வாலிபர்களை மூளைச்சலவை செய்தது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தின் ஆதரவாளர்களாக வாலிபர்களை மாற்றுவதற்காக இவர் அப்பகுதியில் பிரசாரம் மேற்கொண்டு இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து மாநில உளவு பிரிவு போலீசாரும் மத்திய உளவு பிரிவு அதிகாரிகளும் அப்துல் பாசித்தின் பின்னணி பற்றி முழுமையாக விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.