தமிழ்நாடு செய்திகள்

மேட்டுப்பாளையம்-குன்னூர் மலைரெயில் பாதையில் ராட்சத பாறைகள் விழுந்து கிடப்பதை காணலாம்.

மேட்டுப்பாளையம்-ஊட்டி மலை ரெயில் ரத்து: சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்

Published On 2025-10-21 13:44 IST   |   Update On 2025-10-21 13:44:00 IST
  • கடந்த சில தினங்களாக நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது.
  • தண்டவாளத்தில் விழுந்த பாறைகள் மற்றும் மரங்களை அகற்றும் பணியில் ரெயில்வே ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

மேட்டுப்பாளையம்:

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு தினமும் காலை 7.10 மணிக்கு மேட்டுப்பாளையம் ரெயில் நிலையத்தில் இருந்து மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.

இந்த ரெயில் மேட்டுப்பாளையம்-குன்னூர் மலை ரெயில் அடர்ந்த வனங்களுக்கு நடுவே செல்வதால் இந்த ரெயிலில் பயணிக்க சுற்றுலாப் பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்த மலை ரெயிலில் பயணிக்க சுற்றுலாப் பயணிகள் தொடர்ந்து முன்பதிவு செய்திருந்தனர்.

கடந்த சில தினங்களாக நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. இதனால் மேட்டுப்பாளையம்-குன்னூர் இடையே மலை ரெயில் பாதையில் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு ரெயில் தண்டவாளங்களில் ராட்சத பாறைகள், மண் மற்றும் மரங்கள் விழுந்துள்ளன.

தண்டவாளத்தில் விழுந்த பாறைகள் மற்றும் மரங்களை அகற்றும் பணியில் ரெயில்வே ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தண்டவாளங்களில் பல இடங்களில் பாறைகள் சரிந்து விழுந்து உள்ளதால் தண்டவாளத்தை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இதன் காரணமாக இன்று 3-வது நாளாக மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு செல்லும் மலை ரெயில் போக்குவரத்து ரத்து செய்யப்படுவதாக சேலம் கோட்ட ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News