தமிழ்நாடு செய்திகள்

வரதட்சணை புகார் எதிரொலி: இருட்டுக்கடை அல்வா உரிமையாளரின் மருமகன் வெளிநாடு தப்ப முயற்சி?

Published On 2025-04-23 14:24 IST   |   Update On 2025-04-23 14:24:00 IST
  • தன்னுடைய கணவர் லண்டனுக்கு தப்பிச் செல்ல திட்டமிட்டு இருப்பதாக நம்பத்தகுந்த இடத்தில் இருந்து தகவல் வந்துள்ளது.
  • சென்னை, கோவை உள்ளிட்ட விமான நிலையங்களுக்கு ‘லுக் அவுட்’ நோட்டீஸ் கொடுக்க வேண்டும்.

நெல்லை:

நெல்லை டவுனை சேர்ந்த பிரபல இருட்டுக் கடை அல்வா உரிமையாளர் கவிதா-ஹரி சிங்கின் மகள் ஸ்ரீகனிஷ்காவுக்கு கோவையை சேர்ந்த பல்ராம் சிங் என்பவருடன் கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் நடைபெற்றது.

இந்த நிலையில் இருட்டுக்கடை உரிமத்தை வரதட்சணையாக கேட்டு சித்ரவதை செய்ததாக நெல்லை மாநகர போலீஸ் கமிஷனரிடமும், முதலமைச்சரின் தனிப்பிரிவிற்கும் இருட்டுக்கடை உரிமையாளர் தரப்பில் புகார் மனு அளிக்கப்பட்டது.

இந்த விவகாரத்தில் பாளையங்கோட்டை அனைத்து மகளிர் போலீசார், இருட்டு கடை உரிமையாளரின் மருமகனான பல்ராம் சிங் குடும்பத்திற்கு சம்மன் அனுப்பி விசாரணைக்கு அழைத்தபோது 10 நாட்கள் கூடுதல் அவகாசம் கேட்டு அவர்கள் தரப்பில் வக்கீல் மனு செய்தார்.

இந்த நிலையில் இருட்டுக்கடை உரிமையாளரின் மகள் ஸ்ரீ கனிஷ்கா நெல்லை மாநகர துணை போலீஸ் கமிஷனரிடம் மேலும் ஒரு புகார் மனு அளித்துள்ளார்.

அந்த புகார் மனுவில், தன்னுடைய கணவர் லண்டனுக்கு தப்பிச் செல்ல திட்டமிட்டு இருப்பதாக நம்பத்தகுந்த இடத்தில் இருந்து தகவல் வந்துள்ளது.

வரதட்சணை புகார் மீது சம்மன் கொடுக்கப்பட்ட நிலையில் விசாரணைக்கு வராமல் வெளிநாடு தப்ப முயற்சி செய்ய திட்டமிட்டு இருக்கிறார்.

எனவே சென்னை, கோவை உள்ளிட்ட விமான நிலையங்களுக்கு 'லுக் அவுட்' நோட்டீஸ் கொடுக்க வேண்டும். அவர் வெளிநாடு செல்ல அனுமதிக்க கூடாது. என் கணவர் மீது துரிதமாக விசாரணை நடத்தி சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News