தமிழ்நாடு செய்திகள்

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு: அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் 2-வது நாளாக தடை

Published On 2025-10-12 10:09 IST   |   Update On 2025-10-12 10:09:00 IST
  • மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதையை மூழ்கடித்தவாறு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
  • மெயின் அருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

ஒகேனக்கல்:

வடகிழக்கு பருவமழை தொடங்குவதையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனிடையே கர்நாடக-தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான அஞ்செட்டி, பிலிகுண்டுலு, ராசிமணல், கேரட்டி உள்ளிட்ட வனப்பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது.

இதனிடையே நேற்று காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 65 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. காவிரி நீர்பிடிப்பு பகுதியில் மழை குறைந்தது. இதனால் இன்றுகாலை 8 மணிக்கு இந்த நீர்வரத்து வினாடிக்கு 57 ஆயிரம் கனஅடியாக குறைந்தது.

நீர்வரத்து அதிகரித்ததால் அருவிகளில் செந்நிறத்தில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. காவிரி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

மேலும் மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதையை மூழ்கடித்தவாறு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மெயின் அருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

இந்த நீர்வரத்தை காவிரி நுழைவிடமான தமிழக-கர்நாடக மாநில எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் அளவீடு செய்து கண்காணித்து வருகின்றனர்.

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி பரிசல் இயக்கவும், அருவியில் குளிக்கவும் 2-வது நாளாக தடை விதித்து தருமபுரி மாவட்ட கலெக்டர் சதீஷ் உத்தரவிட்டுள்ளார். இதனால் மெயின் அருவிக்கு செல்லும் நுழைவு வாயிலை போலீசார் பூட்டி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் அறிவுறுத்தினர்.

Tags:    

Similar News