தமிழ்நாடு செய்திகள்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடல்

Published On 2025-02-03 10:08 IST   |   Update On 2025-02-03 10:08:00 IST
  • 20-ந் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
  • இடைத் தேர்தலில் 46 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

ஈரோடு:

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மரணம் அடைந்ததை தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வரும் 5-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பு கடந்த 7-ந் தேதி வெளியான உடனேயே ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன.

கடந்த 20-ந் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் 46 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

இன்று மாலை 6 மணிக்கு பிறகு தேர்தல் பிரசாரம் செய்ய அனுமதி இல்லை. ஈரோட்டில் தங்கி இருக்கும் வெளியூர் கட்சி நிர்வாகிகள் இன்று மாலை 5 மணிக்குள் வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதி முழுவதும் 3 நிலை கண்காணிப்பு குழுவினர், 3 தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது தவிர 12 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக சோதனை சாவடிகளில் துணை ராணுவத்தினருடன் உள்ளூர் போலீசார் இணைந்து வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதை தொடர்ந்து நாளை மறுநாள் (புதன்கிழமை) ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக 53 இடங்களில் 237 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் இடைத்தேர்தலையொட்டி ஈரோடு கிழக்கு தொகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதாவது இன்று முதல் 5-ந் தேதி வரையும் மற்றும் வாக்குகள் எண்ணப்படும் நாளான பிப்ரவரி 8-ந் தேதியும் டாஸ்மாக் கடைகளை மூட மாவட்ட கலெக்டர் ராஜ கோபால் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்த தடையை மீறி மதுபானம் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News