தமிழ்நாடு

கொலையுண்ட ராம்குமார்

சட்டவிரோதமாக மது விற்கும் தகராறில் வாலிபர் படுகொலை: மர்ம நபர்களை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிரம்

Published On 2023-11-17 07:49 GMT   |   Update On 2023-11-17 07:49 GMT
  • ராம்குமாரை போன்று மார்க்கெட் பகுதியில் மேலும் சிலரும் மது விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
  • வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரவை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வாடிப்பட்டி:

மதுரை செல்லூர் தத்தனேரி மேலகைலாசபுரம் பகுதியைச் சேர்ந்தவர் முத்துச்சாமி மகன் ராம் குமார் (வயது 25). திருமணமாகாத இவர் காலி மது பாட்டில்கள் சேகரித்தல் மற்றும் விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார். அது மட்டுமின்றி பரவை காய்கறி மார்க்கெட் பகுதியில் இரவு நேரங்களில் சட்டவிரோதமாக மது விற்பனையும் செய்து வந்ததாக கூறப்படுகிறது. தினமும் காலையில் வீட்டில் இருந்து புறப்பட்டு செல்லும் அவர் இரவில் வீடு திரும்புவார்.

இந்த நிலையில் நேற்று வழக்கம்போல் பெற்றோரிடம் கூறிவிட்டு சென்ற ராம்குமார் இரவு நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. அவரது செல்போனை தொடர்பு கொண்டபோது அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதையடுத்து தனது உறவினர்கள் சிலரை அழைத்துக்கொண்டு முத்துச்சாமி மகனை பல்வேறு இடங்களில் தேடியும் எந்தவித தகவலும் கிடைக்கவில்லை.

இதற்கிடையே இன்று அதிகாலை மதுரையை அடுத்த பரவை மார்க்கெட் எதிர்புறம் உள்ள மீனாட்சி நகர் 5-வது குறுக்குத்தெருவில் தலை மற்றும் முகத்தில் சரமாரியான வெட்டுக்காயங்களுடன் வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்ததை அப்பகுதியினர் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவர்கள் இதுகுறித்து சமயநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

மேலும் பரவை கிராம நிர்வாக அலுவலரும் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில் கொலையுண்டவர் செல்லூர் தத்தனேரியை சேர்ந்த ராம்குமார் என்பது தெரியவந்தது.

ராம்குமாரை போன்று அந்த மார்க்கெட் பகுதியில் மேலும் சிலரும் மது விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதில் அவர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் ராம்குமார் கொலை செய்யப்பட்டாரா? அல்லது பணத்தகராறில் கொலை சம்பவம் நடந்ததா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

நள்ளிரவில் நடந்த இந்த கொலை சம்பவத்தில் துப்பு துலக்கும் வகையில் அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையிலும் விசாரணை நடத்தி வரும் சமயநல்லூர் போலீசார் கொலையாளிகளை தனிப்படை அமைத்து தேடி வருகிறார்கள். வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரவை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News