தமிழ்நாடு

ஆடு மேய்க்க சென்ற பெண் கடத்தி கற்பழிப்பு: வடமாநில வாலிபர்கள் 3 பேர் கைது

Published On 2023-09-12 09:13 GMT   |   Update On 2023-09-12 09:13 GMT
  • சந்தேகத்திற்கிடமாக சுற்றிய 3 வட மாநில வாலிபர்களை போலீசார் பிடித்து உள்ளனர்.
  • சிப்காட் போலீசார் வழக்குப் பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கும்மிடிப்பூண்டி:

கும்மிடிப்பூண்டி அருகே உள்ள பில்லா குப்பம் பகுதியை சேர்ந்த 55 வயது பெண் கணவர் மற்றும் மகன்களுடன் வசித்து வருகிறார்.

நேற்று மாலை அந்த பெண் தனக்கு சொந்தமான ஆடுகளை பில்லா குப்பம் பகுதியில் உள்ள கங்கை அம்மன் கோவில் பின்புறம் மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு யாரும் இல்லை. இதனை நோட்டமிட்டு வட மாநில வாலிபர்கள் 3 பேர் அங்கு வந்தனர். அவர்கள் திடீரென ஆடு மேய்த்துக் கொண்டிருந்த பெண்ணை மிரட்டினர். பின்னர் அவரை குண்டு கட்டாக தூக்கி கடத்தி சென்றனர்.

பின்னர் அங்குள்ள மறைவான பகுதியில் பெண்ணை கற்பழித்துவிட்டு மிரட்டி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் அலறி கூச்சலிட்டார்.

சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக கும்மிடிப்பூண்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது வடமாநில வாலிபர்கள் 3 பேர் தன்னை கடத்தி சென்று கற்பழித்ததாக அந்த பெண் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து அதே பகுதியில் சந்தேகத்திற்கிடமாக சுற்றிய 3 வட மாநில வாலிபர்களை போலீசார் பிடித்து உள்ளனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

மேலும் புகார் கூறிய பெண்ணுக்கு சென்னையில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனை செய்யவும் போலீசார் முடிவு செய்து உள்ளனர்.

கற்பழிப்பு தொடர்பாக நேற்று இரவே புகார் செய்தும் போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்று பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

இதனை கண்டித்து அப்பகுதி மக்களும், கம்யூனிஸ்ட் கட்சியினரும் கும்மிடிப்பூண்டி அரசு ஆஸ்பத்திரி நுழைவு வாயிலை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அங்கிருந்த போலீசாரிடமும் வாக்குவாதம் செய்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து சிப்காட் போலீசார் வழக்குப் பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News