பாவூர்சத்திரத்தில் கணவர் வீட்டு முன்பு 2 குழந்தைகளுடன் பெண் தர்ணா
- பபிதா நேற்று இரவு பாவூர்சத்திரம் ரெயில்வே கேட் மேல் புறம் அமைந்துள்ள சக்திவேலின் வீட்டிற்கு வந்துள்ளார்.
- பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் பபிதா மற்றும் அவரது 2 குழந்தைகளை தென்காசி அருகே உள்ள நல்வாழ்வு மையத்தில் கொண்டு சேர்த்தனர்.
தென்காசி:
தூத்துக்குடி மாவட்டம் கீழ சண்முகபுரத்தை சேர்ந்தவர் பொன்னுச்சாமி. இவரது மகள் பபிதா (வயது 39). இவருக்கும், பாவூர்சத்திரம் குருசாமி புரத்தை சேர்ந்த முத்து மகன் சக்திவேலுக்கும்(39) கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
ஆஸ்திரேலியாவில் சாப்ட்வேர் என்ஜினீயராக பணிபுரிந்த சக்திவேல் தற்போது வீட்டில் இருந்து பணிபுரிந்து வருகிறார். கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட பிரச்சினை காரணமாக தற்போது அவர்கள் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் பபிதா நேற்று இரவு பாவூர்சத்திரம் ரெயில்வே கேட் மேல் புறம் அமைந்துள்ள சக்திவேலின் வீட்டிற்கு வந்துள்ளார். சக்திவேலின் பெற்றோர் மட்டுமே அங்கு இருந்துள்ளனர். அவர்கள் பபிதாவை வீட்டிற்குள் அனுமதிக்காமல் கதவை பூட்டி உள்ளனர்.
இதனால் விரக்தி அடைந்த பபிதா அதே வீட்டின் முன்பு தனது 2 குழந்தைகள், உடைமைகளுடன் திடீர் தர்ணாவில் ஈடுபட்டார். தகவல் அறிந்து வந்த பாவூர்சத்திரம் போலீசார் பபிதாவுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் உடன்பாடு ஏற்படாததால் பபிதா மற்றும் அவரது 2 குழந்தைகளை தென்காசி அருகே உள்ள நல்வாழ்வு மையத்தில் கொண்டு சேர்த்தனர்.