தமிழ்நாடு

பெண்ணிடம் கத்தியை காட்டி நகை பறிக்க முயற்சி செய்த போலி சாமியாரை பொதுமக்கள் பிடித்து வைத்திருந்த காட்சி.

கிரிவலப்பாதையில் பெண் பக்தரிடம் கத்தியை காட்டி நகை பறிக்க முயற்சி: போலி சாமியாருக்கு அடி-உதை

Published On 2023-08-12 05:12 GMT   |   Update On 2023-08-12 05:12 GMT
  • காட்டுப் பகுதியில் இருந்து பெண் அலறல் சத்தம் கேட்ட உறவினர்கள் மற்றும் கிரிவலப் பாதையில் சென்றவர்கள் காட்டு பகுதிக்கு சென்றனர்.
  • வழிப்பறியில் ஈடுபட்டவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

திருவண்ணாமலை:

ஆந்திர மாநிலம் திருப்பதியை சேர்ந்தவர் லாவண்யா. தனது உறவினர்களுடன் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வந்தார். அவர் இன்று காலை கிரிவலம் சென்று கொண்டிருந்தார்.

அப்போது செங்கம் செல்லும் சாலையை அடுத்து தூர் வாசகர் முனிவர் கோவில் அருகில் இயற்கை உபாதையை கழிக்க சாலையின் ஓரமாக இருந்த காட்டுப் பகுதிக்குள் சென்றார்.

இருளில் மறைந்திருந்த ஒருவர் அவரை கத்தியால் தாக்கி நகைகளை பறிக்க முயற்சித்தார். இதனைக்கண்டு லாவண்யா கூச்சலிட்டார்.

காட்டுப் பகுதியில் இருந்து பெண் அலறல் சத்தம் கேட்ட உறவினர்கள் மற்றும் கிரிவலப் பாதையில் சென்றவர்கள் காட்டு பகுதிக்கு சென்றனர். கொள்ளையனிடமிருந்து லாவண்யாவை மீட்டனர்.

கொள்ளையனை பொதுமக்கள் மடக்கி பிடித்து சரமாரியாக அடித்து உதைத்தனர். திருவண்ணாமலை தாலுகா போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

வழிப்பறியில் ஈடுபட்டவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

முதற்கட்ட விசாரணையில் வழிப்பறியில் ஈடுபட்ட கொள்ளையன் திருக்கோவிலூரை சேர்ந்த பாபு என்பது தெரியவந்தது. அவர் போலி சாமியாராக வலம் வருவது தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

கிரிவலப் பாதையில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வருவதால் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கிரிவலப் பாதையில் உள்ள அனைத்து கழிவறைகளையும் திறந்து வைத்து பராமரிக்க வேண்டும்.

கிரிவலப்பாதையில் கடந்த சில தினங்களாகவே சாதுக்கள் போர்வையில் ஆன்மீக பக்தர்களை மிரட்டுவதும், தாக்குவதும், கத்தியை காட்டி வழிப்பறியில் ஈடுபடுவதும் வாடிக்கையாக உள்ளது.

உண்மையான சாதுக்கள் யார் என்று அறிந்து அவர்களை அடையாளப்படுத்துவதுடன் போலி சாமியார்களை கைது செய்ய வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர். 

Tags:    

Similar News