தமிழ்நாடு

அ.தி.மு.க.வை சேர்ந்த அரசு ஒப்பந்ததாரர் வீடு உள்பட 3 இடங்களில் லஞ்ச ஒழிப்பு சோதனை

Published On 2023-06-06 05:30 GMT   |   Update On 2023-06-06 05:30 GMT
  • சகோதரர்கள் இருவரும் சேர்ந்து நிதி நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு தொழில்களை செய்து வந்தனர்.
  • சோதனை நடந்து வரும் பகுதிகளில் ஏராளமான உள்ளூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள கருக்காக்குடி பகுதியை சேர்ந்தவர் பழனிவேல். தொழிலதிபரான இவர் அ.தி.மு.க.வில் உள்ளார். அரசு ஒப்பந்ததாரரான இவர் ஏராளமான பணிகளை எடுத்து நடத்தி வருகிறார்.

இவரது சகோதரர் முருகானந்தம். பா.ஜ.க.வில் இருக்கும் இவர் புதுக்கோட்டை மாவட்ட பொருளாளராக பணியாற்றி வருகிறார்.

சகோதரர்கள் இருவரும் சேர்ந்து நிதி நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு தொழில்களை செய்து வந்தனர். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக தனித்தனியாக தொழில் செய்து வருகின்றனர்.

கடந்த அ.தி.மு.க. ஆட்சியின்போது முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் ஆதரவாளர்களாக செயல்பட்டு வந்த இவர்கள் மீது அதிக சொத்து குவித்ததாக புகார்கள் எழுந்தன.

இந்த நிலையில் பழனிவேலுக்கு சொந்தமான கருக்காக்குடியில் உள்ள இரண்டு வீடுகள், புதுக்கோட்டை நகர் பகுதியில் உள்ள அவரது அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக புகுந்து சோதனை நடத்தி வருகிறார்கள்.

இதையொட்டி சோதனை நடந்து வரும் பகுதிகளில் ஏராளமான உள்ளூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

Similar News