தமிழ்நாடு

ஆண்கள் மட்டுமே பங்கேற்ற வேட்டைக்காரன் கோவில் திருவிழா- அனைவருக்கும் அசைவ விருந்து

Published On 2023-03-28 10:25 GMT   |   Update On 2023-03-28 10:25 GMT
  • முதலில் வேட்டைக்கருப்புக்கு பொங்கல் வைத்து அதன்பின்னர் வழிபாட்டை தொடங்கினர்.
  • கறி விருந்து அங்கு கூடியிருந்த சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்களுக்கு சாதமும், ஆட்டுகறி குழம்பும் பிரசாதமாக பரிமாறப்பட்டது.

நத்தம்:

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே உலுப்பகுடியில் பழமையான வேட்டைக்காரன் கோவில் உள்ளது. இந்த கோவில் பல நூறு ஆண்டுகளாக பங்குனி மாதம் ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் வினோத திருவிழா பாரம்பரியமாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த திருவிழாவில் பிறந்த பெண் குழந்தை முதல் வயதான மூதாட்டி வரையிலான பெண்கள் பங்கேற்க அனுமதி கிடையாது. ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் இத்திருவிழாவில் பக்தர்கள் காணிக்கையாக வழங்கும் ஆடு, கோழி, அரிசி மற்றும் உணவு பொருட்களை கொண்டு வேட்டைக்கார கருப்புக்கு படையலிட்டு வழிபாடு நடத்தப்படும். பின்னர் விழாவில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் அவை பிரசாதமாக வழங்கப்படும். இதற்காக கடந்த 2 நாட்களாகவே பக்தர்கள் தங்கள் காணிக்கையை தொடர்ந்து வழங்கி வந்தனர்.

முதலில் வேட்டைக்கருப்புக்கு பொங்கல் வைத்து அதன்பின்னர் வழிபாட்டை தொடங்கினர். பின்னர் நேர்த்திக் கடனாக செலுத்தப்பட்ட 50 ஆடுகள் பலியிடப்பட்டு சமைக்கப்பட்டன. 150 மூட்டை அரிசியில் சாதம் தயாரானது. இந்த கறி விருந்து அங்கு கூடியிருந்த சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்களுக்கு சாதமும், ஆட்டுகறி குழம்பும் பிரசாதமாக பரிமாறப்பட்டது.

இன்று நடந்த கறி விருந்தில் புண்ணாபட்டி, காட்டுவேலம்பட்டி, முளையூர், வேலாயுதம்பட்டி, குட்டூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆண்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News