தமிழ்நாடு

வண்டலூர் பூங்காவில் பார்வையாளர்கள் கட்டணம் உயருகிறது

Published On 2022-11-17 06:24 GMT   |   Update On 2022-11-17 06:24 GMT
  • வண்டலூர் பூங்காவில் பெரியவர்களுக்கு ரூ.90, சிறியவர்களுக்கு ரூ.50, கேமராவுக்கு ரூ.25 மற்றும் வெளிநாட்டினருக்கு ரூ.500 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
  • கடந்த 3 ஆண்டுக்கான வரவு, செலவுத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டது.

வண்டலூர்:

வண்டலூர் உயிரியல் பூங்கா மிகவும் சிறப்பு வாய்ந்தது. விலங்குகள் இயற்கை சூழலில் வாழ்வதற்கு ஏற்றார்போல் இந்த பூங்கா இயற்கையாகவே அமைந்து உள்ளது. இங்கு ஆண்டுக்கு 20 லட்சம் பார்வையாளர்கள் வந்து செல்கிறார்கள்.

இந்த நிலையில் நேற்று தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு உயிரியல் பூங்கா ஆணையத்தின் 21-வது ஆட்சி மன்ற குழு கூட்டம் நடைபெற்றது.

இதில் பூங்காக்களில் அடிப்படை வசதிகள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ஆலோசிக்கப்பட்டது. வண்டலூர் பூங்காவில் மாற்றுத்திறனாளிகளுக்கு சாய்வு தளப்பாதைகள், ஓய்வு அறைகள், மாற்றுத்திறனாளிகளுக்கான வசதியான வாகனங்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு சுத்தமான குடிநீர், கழிவறை வசதிகள் ஏற்படுத்த அதிகாரிகளிடம் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

மேலும் கூட்டத்தின்போது வண்டலூர் பூங்கா பார்வையாளர்கள் நுழைவு கட்டணம் உயர்வு குறித்தும் விவாதிக்கப்பட்டது. எனவே பார்வையாளர்கள் கட்டணம் உயர்வு குறித்து விரைவில் தகவல் வெளியாகும் என்று தெரிகிறது.

தற்போது வண்டலூர் பூங்காவில் பெரியவர்களுக்கு ரூ.90, சிறியவர்களுக்கு ரூ.50, கேமராவுக்கு ரூ.25 மற்றும் வெளிநாட்டினருக்கு ரூ.500 கட்டணம் வசூலிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. இந்திய மற்றும் வெளிநாட்டு பார்வையாளர்களுக்கான கட்டண வித்தியாசத்தை நீக்க உயிரியல் பூங்காவுக்கு அனுமதி கிடைத்து உள்ளது. கூட்டத்தில் கடந்த 3 ஆண்டுக்கான வரவு, செலவுத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டது.

இந்த ஆண்டுக்கான வரவு, செலவு திட்ட முன்மொழிவும் அங்கீகரிக்கப்பட்டது. இதுகுறித்து வண்டலூர் பூங்கா அதிகாரி ஒருவர் கூறும்போது, 'மாற்றுத்திறனாளிகள் பூங்காவை சுற்றி பார்க்க சாய் தளங்கள், பிரத்யேக வாகனங்கள் சேர்க்கப்பட உள்ளது. இதன் மூலம் பூங்காவை மாற்றுத்திறனாளிகளும் எளிதாக சுற்றி பார்க்க முடியும்' என்றார்.

Tags:    

Similar News