தமிழ்நாடு

வடமாநில பெண் அபாய சங்கிலியை பிடித்து இழுத்ததால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்ற ரெயில் நடுவழியில் திடீர் நிறுத்தம்

Published On 2023-02-03 05:48 GMT   |   Update On 2023-02-03 08:26 GMT
  • ரெயில் ஒரு சில நிமிடங்கள் கால தாமதமாக அரக்கோணம் வந்தடைந்தது.
  • அரக்கோணம் ரெயில் நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் இடையே பதற்றம் ஏற்பட்டது.

வேலூர்:

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேலூர் மாவட்டத்தில் 2 நாள் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு ரெயிலில் சென்னை திரும்பினார். அதற்காக நேற்று மாலை காட்பாடி ரெயில் நிலையம் வந்தார்.

ஆலப்புழாவில் இருந்து தன்பாத் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் 7.15 மணிக்கு காட்பாடியில் இருந்து சென்னைக்கு தனி ரெயில் பெட்டியில் பயணம் செய்தார்.

ரெயில் திருவலம் அடுத்த முகுந்தராயபுரம் அருகே சென்றபோது வடமாநில பெண் பயணி ஒருவர் அபாய சங்கிலியை பிடித்து இழுத்தார். இதனால் ரெயில் நின்றது. போலீசார் வந்து பெண் பயணியிடம் விசாரித்தனர். அப்போது அவர் தெரியாமல் கைப்பட்டதாக கூறினார்.

வடமாநில பெண்ணை போலீசார் எச்சரித்தனர். இதை தொடர்ந்து ரெயில்வே அதிகாரிகள் அவருக்கு ரூ.1000 அபராதம் விதித்து தொடர் பயணத்துக்கு அனுமதித்தனர். ரெயில் நடுவழியில் நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

ரெயில் ஒரு சில நிமிடங்கள் கால தாமதமாக அரக்கோணம் வந்தடைந்தது.

இதனால் அரக்கோணம் ரெயில் நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் இடையே பதற்றம் ஏற்பட்டது.

Tags:    

Similar News