தமிழ்நாடு

போலீசார் மீது எஸ்.பி. அலுவலகத்துக்கு புகார் கொடுக்க வந்த வேடியப்பன்.

அபராத ரசீதில் ஒரு தொகை-கையில் கேட்டது ஒரு தொகை: நியாயம் கேட்டவரை எட்டி உதைத்த போக்குவரத்து காவலர்கள்

Published On 2023-01-25 05:52 GMT   |   Update On 2023-01-25 05:52 GMT
  • அரூர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் படித்து வரும் எனது மகள்களை அழைத்து வருவதற்காக இரு சக்கர வாகனத்தில் சென்றேன்.
  • போலீஸ் இன்ஸ்பெக்டர் என்னை பூட்ஸ் காலால் எட்டி உதைத்தார்.

தருமபுரி:

தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த வீரப்பநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முனுசாமி என்பவரது மகன் வேடியப்பன் (வயது 38).

இவர் தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வந்து நேற்று மாலை எஸ்.பி.யிடம் புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார்.

நான் நேற்று முன்தினம் அரூர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் படித்து வரும் எனது மகள்களை அழைத்து வருவதற்காக இரு சக்கர வாகனத்தில் சென்றேன்.

அரூர் மகளிர் மேல்நிலைப்பள்ளி எதிரில் நின்றிருந்த போக்குவரத்து இன்ஸ்பெக்டர் மற்றும் காவலர்கள் எனது வாகனத்தை நிறுத்தி ஹெல்மெட் அணியாததற்கு ரூ. 2,300 பணம் கொடு என்று கேட்டனர்.

என்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்று கூறியதற்கு ஆன்லைன் மூலம் அபராதம் கட்டு என்று கூறி ரசீது கொடுத்தனர்.

அதில் அபராத தொகை ரூ.1,000 என்று குறிப்பிட்டிருந்ததை பார்த்து, என்னிடம் ரூ.2,300 கேட்டீர்கள். ஆனால் ரசீதில் ரூபாய் 1000 மட்டும் உள்ளதே என்று கேட்டதற்கு, என்னை தரக்குறைவாக பேசியதோடு மட்டுமல்லாமல், என்னை இழுத்துச்சென்று சரமாரியாக தாக்கினார்கள்.

போலீஸ் இன்ஸ்பெக்டர் என்னை பூட்ஸ் காலால் எட்டி உதைத்தார். என்னை விட்டு விடுங்கள் என்று கெஞ்சியபோது என்னை ஜீப்பில் ஏற்றிக்கொண்டு காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று எனது சாதி பெயரை சொல்லி கேவலமாக பேசியதோடு சரமாரியாக தாக்கினார்கள்.

பின்பு என்னிடம் வெற்று பேப்பர்களில் கையெழுத்து பெற்றுக்கொண்டு என்னை மீண்டும் எனது இருசக்கர வாகனம் நிறுத்தி இருந்த இடத்திற்கு கொண்டு வந்து விட்டனர்.

பின்பு நான் எனது மனைவிக்கு போன் செய்து வரச் சொல்லி, அவர் என்னை அரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தார்.

நான் முறையாக போலீஸ் இன்ஸ்பெக்டர் அளித்த ரசீதுபடி அபராதம் செலுத்த தயாராக இருந்த நிலையிலும் அவர் அதிகமாக பணம் கேட்டது குறித்து கேள்வி கேட்டதால் அதிகார துஷ்பிரயோக செயலில் மனிதாபமானமின்றி கண் மூடித்தனமாக தாக்குதல் நடத்திய காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News