தமிழ்நாடு

ஏற்காட்டில் பூத்து குலுங்கும் 650 வகையான ரோஜா மலர்கள்- கண்டு மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்

Published On 2023-02-12 05:36 GMT   |   Update On 2023-02-12 05:36 GMT
  • சுற்றுலா தலமான அண்ணா பூங்கா மற்றும் ரோஜா தோட்டம், தாவரவியல் பூங்காவில் இன்று சுற்றுலா பயணிகள் திரண்டனர்.
  • சுற்றுலா பயணிகள் ரோஜா மலர்களை கண்டு ரசித்ததுடன், செல்போன்களில் செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர்.

சேலம்:

சேலம் மாவட்டம் ஏற்காட்டுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் ஏற்காட்டில் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. இதற்காக வளர்க்கப்படும் பூச்செடிகள் தொடர்ந்து பராமரிப்பு செய்யப்பட்டு வருகிறது.

தற்போது கோடை காலம் தொடங்கி உள்ள நிலையில் ஏற்காட்டில் சுற்றுலா பயணிகளின் வருகை வழக்கத்தை விட அதிகமாக உள்ளது. அங்குள்ள சுற்றுலா தலமான அண்ணா பூங்கா மற்றும் ரோஜா தோட்டம், தாவரவியல் பூங்காவில் இன்று சுற்றுலா பயணிகள் திரண்டனர்.

இந்த பூங்காக்களில் 650-க்கும் மேற்பட்ட ரோஜா ரகங்கள் நடவு செய்யப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக டபுள் டிலைட், மார்கோ போலோ, மேஜிக் லேண்டர், பேமிலி, மூன் ஸ்டோன், சம்மர் ஸ்நோ, ரெட் பிரான், சம்மர் டைம், பர்புல் மூன், மில்கி வே, சில்வர் லிவிங், டேபிள் மவுண்டைன், புளோரி போன்ற ரகங்கள் சுட்டெரிக்கும் வெயிலுக்கு இதழ்கள் விரிந்து பூத்து குலுங்குகிறது.

அதனை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்து மகிழ்ந்தனர். அண்ணா பூங்கா, ரோஜா தோட்டம், ஏரி பூங்கா போன்ற இடங்களில், சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் சுற்றிப்பார்த்து பொழுது போக்கி மகிழ்ந்தனர்.

சுற்றுலா பயணிகள் ரோஜா மலர்களை கண்டு ரசித்ததுடன், செல்போன்களில் செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர்.

இனிவரும் காலங்களில், சூழல் பூங்கா மற்றும் படகு இல்லம், பக்கோடா பாயிண்ட், லேடிஸ் சீட் போன்ற இடங்களில் சுற்றுலா பயணிகளை வருகை அதிகமாக இருக்கும் என்பதால், ரோஜா தோட்டத்தில் பராமரிப்பு பணிகள் முழு வீச்சில் தொடங்கி உள்ளது.

Tags:    

Similar News