தமிழ்நாடு

கடற்கரையில் உள்ள மண்டபங்களில் அமர்ந்து இருந்த காதல் ஜோடிகளை காணலாம்.

இன்று காதலர் தினம்- கன்னியாகுமரி கடற்கரையில் குவிந்த ஜோடிகள்

Published On 2023-02-14 06:06 GMT   |   Update On 2023-02-14 06:06 GMT
  • காதல் ஜோடியினர் கரம் கோர்த்தபடியும் தோளில் கைபோட்ட படியும் கடற்கரை பகுதியை வலம் வந்தனர்
  • கடை வீதிகளில் உள்ள சங்கு கடைகளில் காதலர்கள் பலரும் கூடி நின்று தங்கள் பெயர்களை கடல் சங்கில் பதிவு செய்து வாங்கி சென்றனர்.

கன்னியாகுமரி:

இன்று உலகம் முழுவதும் காதலர் தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. காதலர் தினத்தையொட்டி குமரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் இன்று காதல் ஜோடிகளின் கூட்டம் அலைமோதியது. கன்னியாகுமரி கடற்கரையில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலிதுறை கடற்கரை பகுதியில் உள்ள சுனாமி நினைவுப் பூங்கா, கடற்கரை சாலையில் உள்ள பேரூராட்சிக்கு சொந்தமான பொழுது போக்கு பூங்கா.

சன்செட் பாயிண்ட் கடற்கரைப்பகுதி, கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உள்ள சுற்றுச்சூழல் பூங்கா, வட்டக்கோட்டை பீச் உள்பட அனைத்து சுற்றுலா தலங்களிலும் காதல் ஜோடியினர் இன்று காலையிலிருந்தே குவிய தொடங்கினர்.

காதல் ஜோடியினர் கரம் கோர்த்தபடியும் தோளில் கைபோட்ட படியும் கடற்கரை பகுதியை வலம் வந்தனர். ஒரு சிலர் மறைவான இடங்களில் அமர்ந்து கொஞ்சி மகிழ்ந்தனர். கடற்கரையில் நின்றவாறு சில ஜோடிகள், விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையின் பின் பகுதியை கவர் செய்து தாங்கள் கன்னியாகுமரிக்கு வந்ததை நினைவுகூரும் வகையில் செல்போன் மூலம் செல்பி மற்றும் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

கடை வீதிகளில் உள்ள சங்கு கடைகளில் காதலர்கள் பலரும் கூடி நின்று தங்கள் பெயர்களை கடல் சங்கில் பதிவு செய்து வாங்கி சென்றனர். இதே போல ஒரே அரிசியில் காதல் ஜோடியினர் இருவர் பெயரையும் பதிவு செய்தனர். அவற்றை ஒருவருக்கொருவர் பரிசுப் பொருட்களாக வழங்கி மகிழ்ந்தனர்.

கடற்கரையில் உள்ள காட்சி கோபுரம் மற்றும் கடற்கரையோரம் அமைக்கப்பட்டு உள்ள பூங்காக்களிலும் காதலர்கள் பலர் ஜோடியாக அமர்ந்து கடலின் அழகை பார்த்து ரசித்தனர்.

அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் இன்று ஏராளமான காதல் ஜோடிகள் மோட்டார் சைக்கிளில் கன்னியாகுமரிக்கு வந்திருந்தனர். அவர்கள் கடற்கரை சாலையில் ரேஸ் செய்தபடி வலம் வந்தனர்.

கடற்கரை பகுதியில் காதலர்கள் ஒருவருக்கு ஒருவர் கட்டிப்பிடித்து முத்த மழை பொழிந்தனர். ரோஜா மலர்களை பரிமாறி சிலர் காதலர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

காதலர் தினத்தை யொட்டி கன்னியாகுமரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. துணை சூப்பிரண்டு ராஜா தலைமையில் போலீசார் கடற்கரை பகுதியில் ரோந்து சென்று தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது மறைவான இடங்களில் அமர்ந்து அத்துமீறிய சில காதல் ஜோடிகளை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

Tags:    

Similar News