தமிழ்நாடு

ஈரோடு மாவட்ட அணைகளின் நீர்மட்டம் குறைய தொடங்கியது

Published On 2023-04-19 05:19 GMT   |   Update On 2023-04-19 05:19 GMT
  • மழைப்பொழிவு இல்லாத காரணத்தால் மாவட்டத்தில் முக்கிய அணைகளின் நீர்மட்டம் குறைந்து வருகிறது.
  • 33.46 அடி கொள்ளளவு கொண்ட வரட்டுபள்ளம் அணையின் நீர்மட்டம் 27.36 அடியாக குறைந்துள்ளது.

ஈரோடு:

ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. இந்த அணையின் மூலம் ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 2 லட்சத்து 7 ஆயிரம் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலை பகுதி உள்ளது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக பவானிசாகர் அணைக்கு வரும் நீர்வரத்தை காட்டிலும் பாசனத்திற்காக அதிக அளவில் தொடர்ந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதாலும், அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் மழைப்பொழிவு இல்லாததாலும் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 86.14 அடியாக குறைந்து உள்ளது. அணைக்கு வினாடிக்கு 918 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

அணையில் இருந்து மீண்டும் கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்காக 5-ம் சுற்று தண்ணீர் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. நேற்று 2000 கன அடி திறந்து விட்டபட்ட நிலையில் இன்று கீழ்பவானி வாய்க்காலுக்கு வினாடிக்கு 2,300 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. காளிங்கராயன் பாசனத்திற்காக 600 கன அடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 200 கனஅடி என மொத்தம் அணையில் இருந்து 3,100 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இதேபோல் மழைப்பொழிவு இல்லாத காரணத்தால் மாவட்டத்தில் மற்ற முக்கிய அணைகளின் நீர்மட்டம் குறைந்து வருகிறது. அதன்படி 33.46 அடி கொள்ளளவு கொண்ட வரட்டுபள்ளம் அணையின் நீர்மட்டம் 27.36 அடியாக குறைந்துள்ளது. 41.75 கொள்ளளவு கொண்ட குண்டேரிப்பள்ளம் அணையின் நீர்மட்டம் 38.89 அடியாக குறைந்துள்ளது. 30.84 அடி கொள்ளளவு கொண்ட பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் 24.80 அடியாக உள்ளது.

Tags:    

Similar News