பாவூர்சத்திரம் அருகே மரக்கிளையில் சிக்கி அந்தரத்தில் தொங்கிய மினி லாரி
- லாரியின் கூண்டு பகுதியின் மேற்பகுதி சாலையின் குறுக்கே நின்ற மரக்கிளையின் மீது மோதி அந்தரத்தில் தொங்கியது.
- மினி லாரி அந்தரத்தில் தொங்கிய வீடியோ தென்காசி மாவட்டத்தில் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தென்காசி:
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள ஆவுடையானூர் இந்திரா நகர் பகுதியில் செல்லும் நெடுஞ்சாலையின் குறுக்கே மரம் வளர்ந்துள்ளது.
அவ்வழியே செல்லும் அரசு பஸ்கள், கனரக லாரிகள் உள்ளிட்டவை செல்லும் பொழுது மரக்கிளையில் உரசுவதால் விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளது என கூறி சமூக ஆர்வலர்கள் நெடுஞ்சாலை துறையினரிடம் பலமுறை கூறியும் மரத்தை அகற்றாமல் அலட்சியம் காட்டியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் பாவூர்சத்திரம் மாடக்கண்ணு பட்டியை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவர் தனது கூண்டு கட்டிய மினி லாரியில் அருகில் உள்ள கிராமங்களுக்கு சென்று தண்ணீர் கேன் போட்டு விட்டு மீண்டும் மாடக் கண்ணுபட்டி நோக்கி வந்த போது மினி லாரியின் கூண்டு பகுதியின் மேற்பகுதி சாலையின் குறுக்கே நின்ற மரக்கிளையின் மீது மோதி அந்தரத்தில் தொங்கியது.
இதனை கண்ட அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இருப்பினும் பொதுமக்கள் அனைவரும் இணைந்து அந்தரத்தில் தொங்கிய மினி லாரிக்குள் இருந்த சுப்பிரமணியனை பத்திரமாக மீட்டு லாரியையும் மரக்கிளையில் இருந்து லாவகமாக இறக்கினர்.
லாரி மரக்கிளையில் சிக்கியதை வீடியோவாக எடுத்து ஆவுடையானூர் பகுதியை சேர்ந்த தமிழன் மக்கள் நலச்சங்கம் என்ற சமூக ஆர்வலர் அமைப்பை சேர்ந்தவர்கள் நெடுஞ்சாலை துறையினரின் அலட்சியத்தின் காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டதாக கூறி சமூக வலைதளங்களில் வீடியோவை வெளியிட்டுள்ளனர்.
தற்போது மினி லாரி அந்தரத்தில் தொங்கிய வீடியோ தென்காசி மாவட்டத்தில் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.