வேலூர் கோட்டை பூங்காவில் கல்லால் தாக்கி பெயிண்டர் படுகொலை
- வேலூர் ஓல்டுடவுன் எம்ஜிஆர் நகர் செங்காநத்தம் ரோடு பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன்.
- முன்னா மனைவி குறித்து மணிகண்டன் தவறாக பேசியதாக கூறப்படுகிறது.
வேலூர்:
வேலூர் ஓல்டுடவுன் எம்ஜிஆர் நகர் செங்காநத்தம் ரோடு பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 37) பெயிண்டராக வேலை பார்த்து வந்தார். இவரது நண்பர் வசந்தபுரம் இந்திரா நகரை சேர்ந்த முன்னா என்கிற அகேஷா (37) இவர் மீது வழிப்பறி உள்ளிட்ட வழக்குகள் உள்ளன.
நேற்று காலை முன்னா, மணிகண்டனை அழைத்து கொண்டு பெரியார் பூங்காவிற்கு சென்றார். அங்குள்ள குடிநீர் தொட்டி அருகே அமர்ந்து இருவரும் மது குடித்தனர்.
அப்போது முன்னா மனைவி குறித்து மணிகண்டன் தவறாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த முன்னா மணிகண்டனை கீழே தள்ளி அவர் மீது பெரிய கல்லை தூக்கிப் போட்டார்.
இதில் படுகாயம் அடைந்த மணிகண்டன் அலறி துடித்தார். சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் இதுகுறித்து வேலூர் வடக்கு போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மணிகண்டனை மீட்டு அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.அங்கு சிகிச்சை பெற்று வந்த மணிகண்டன் இன்று காலை பரிதாபமாக இறந்தார்.
இதனை தொடர்ந்து போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து முன்னா என்கிற அகேஷாவை கைது செய்தனர். பின்னர் அவர் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.