தமிழ்நாடு

வாசுதேவநல்லூர் அருகே லாரி மீது கார் மோதி 2 பேர் பலி

Published On 2023-05-20 05:05 GMT   |   Update On 2023-05-20 05:05 GMT
  • மாரியப்பன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
  • வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் உலகநாதனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிவகிரி:

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் கலைஞர் காலனியை சேர்ந்தவர் மாடசாமி. இவரது மகன் உலகநாதன் (வயது35). இவர் லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.

இன்று காலை லாரியில் சிமெண்ட் ஏற்றிக் கொண்டு சிவகிரியில் இருந்து தென்காசி நோக்கி சென்று கொண்டிருந்தார். வாசுதேவநல்லூர் அருகே மேலபுதூரில் சென்றபோது பின்னால் ஒரு கார் வந்து கொண்டிருந்தது.

காரை சாம்பவர்வடகரை அருகே உள்ள கரடிகுளம் கிழக்கு தெருவை சேர்ந்த வெள்ளத்துரை (55) என்பவர் ஓட்டி வந்தார். அந்த காரில் சிவகிரி அருகே நாரணாபுரம் வடக்கு தெருவை சேர்ந்த அண்ணாமலை (45), காளியம்மாள் (70), மாரியம்மாள், சாம்பவர் வடகரை மேலரதவீதியை சேர்ந்த மாரியப்பன் ஆகியோர் வந்தனர்.

அப்போது எதிர்பாரா தவிதமாக முன்னால் சென்ற லாரி மீது கார் மோதியது. இதில் கார் கட்டுப்பாட்டை இழந்து லாரியின் பின் பக்கத்திற்குள் புகுந்தது. இந்த விபத்தில் காரின் முன்பக்கம் அப்பளம் போல் நொறுங்கியது. இதில் மாரியப்பன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அண்ணாமலை, வெள்ளத்துரை, மாரியம்மாள், கனியம்மாள் ஆகியோர் படுகாயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர்.

தகவல் அறிந்து அங்கு விரைந்து சென்ற வாசுதேவநல்லூர் போலீசார், உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 4 பேரையும் மீட்டு புளியங்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அண்ணாமலையை சிவகிரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு செல்லும் வழியில் அவர் பரிதாபமாக இறந்தார். மாரியப்பன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் உலகநாதனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News