தமிழ்நாடு

இரட்டை இலை சின்னம் தானாக முடங்குகிறது- சுயேட்சை சின்னத்தை ஏற்பதை தவிர வேறு வழி இல்லை

Published On 2023-02-03 09:14 GMT   |   Update On 2023-02-03 09:14 GMT
  • ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் கிடைக்குமா? என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது.
  • எடப்பாடி பழனிசாமி அணியின் கோரிக்கையை ஏற்க தேர்தல் ஆணையம் மறுப்பதால் இந்த தேர்தலில் இரட்டை இலை சின்னம் தானாகவே முடங்குகிறது.

சென்னை:

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகிற 27-ந்தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் என இரு அணிகளும் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளன. எடப்பாடி பழனிசாமி தரப்பில் கே.எஸ்.தென்னரசு வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அதே நேரத்தில் ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் செந்தில் முருகன் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.

அ.தி.மு.க.வின் இரு அணிகளும் வேட்பாளர்களை அறிவித்துள்ளதால் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடப் போவது யார்? இரட்டை இலை சின்னம் யாருக்கும் கிடைக்காமல் முடங்கி விடுமா என்கிற கேள்விகள் எழுந்துள்ளன.

அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டு ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பான மேல்முறையீட்டு வழக்கை சுப்ரீம் கோர்ட்டு விசாரித்தது. விசாரணை முடிவடைந்த நிலையில் தேதி குறிப்பிடப்படாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது.

இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் ஈரோடு இடைத்தேர்தலில் என் கையெழுத்துடன் கூடிய வேட்பாளர் பெயரை ஏற்க தேர்தல் ஆணையம் மறுக்கிறது. எனவே என்னை அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக அங்கீகரித்து நான் கையெழுத்திட்ட வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

இது தொடர்பாக தேர்தல் ஆணையம் 3 நாட்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு கூறி இருந்தது. அதன்படி தேர்தல் ஆணையம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் அதி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் இன்னமும் ஏற்கவில்லை.

இது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளதால் பொதுக்குழு தீர்மானங்களை தேர்தல் ஆணையம் ஏற்கவில்லை. இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கு ஒதுக்க கோரி, யாரும் தேர்தல் ஆணையத்தை அணுகவில்லை. இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க வேண்டும் என்ற எடப்பாடி பழனிசாமியின் கோரிக்கை தொடர்பாக தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் முடிவெடுப்பார் என்று கூறப்பட்டுள்ளது.

எனவே ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் கிடைக்குமா? என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது.

இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்கான ஏ,பி படிவங்களில் கையெழுத்திட ஓ.பன்னீர் செல்வம் தயாராக இருக்கிறார். அதே நேரத்தில் அந்த படிவத்தில் எடப்பாடி பழனிசாமி கையெழுத்திட தயாராக இல்லை என்பதால் இரட்டை இலை சின்னம் கிடைக்காது. வருகிற 10-ந் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. அதற்குள் தீர்ப்பு வராவிட்டாலும் இருவருக்குமே இரட்டை இலை சின்னம் கிடைக்காமல் போகலாம். இப்போதைய சூழ்நிலையில் இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமிக்கோ அல்லது ஓ.பன்னீர்செல்வத்துக்கோ இரட்டை இலை சின்னம் கிடைப்பதற்கான வாய்ப்பு மிகவும் குறைவாகவே உள்ளது.

எடப்பாடி பழனிசாமி அணியின் கோரிக்கையை ஏற்க தேர்தல் ஆணையம் மறுப்பதால் இந்த தேர்தலில் இரட்டை இலை சின்னம் தானாகவே முடங்குகிறது. எனவே இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் என இரு தரப்பினருமே சுயேட்சை சின்னத்தை ஏற்பதை தவிர வேறு வழி இல்லை.

எனவே சுயேட்சை சின்னத்தை பெற்றாலும் தங்களின் பலத்தை காட்ட இரு அணியினருமே தயாராகி வருகிறார்கள்.

Tags:    

Similar News