குறி சொல்லி லட்சங்களை வாரி இறைத்த பெண் சாமியாரை துரத்த திடீர் மிரட்டல்
- கொரோனாவுக்கு பின்னர் பழையபடி பக்தர்கள் வருவார்கள் என தொழிலதிபர்கள் எதிர்பார்த்தனர்.
- நிலத்தை வாங்கிய கரூர் தொழில் அதிபர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த பெண் சாமியாரை துரத்த முயற்சி செய்ததாகவும் தகவல் வெளியானது.
கரூர்:
கரூரைச் சேர்ந்த 2 டெக்ஸ்டைல் தொழில் அதிபர்கள் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு அரவக்குறிச்சி அருகாமையில் உள்ள பெரிய தொப்பார்பட்டியில் 4 ஏக்கர் நிலம் வாங்கினர். அப்போது அந்த ஊர் மக்கள் டெக்ஸ்டைல் தொழில் தொடங்குவார்கள், நமது கிராம மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று நம்பி இருந்தனர்.
ஆனால் சில மாதங்கள் கழித்து அந்த இடத்தை சுற்றி காம்பவுண்டு சுவர் எழுப்பப்பட்டது. பின்னர் குதிரை சிலை, கருப்பு சாமி சிலை ஆகியவற்றை அங்கு நிறுவி வெள்ளிக்கிழமைகளில் கிடா வெட்டி பூஜை செய்தனர். இதில் பங்கேற்க சுற்று வட்டார பொதுமக்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. இதையடுத்து ஏராளமான ஆண்களும், பெண்களும் பூஜைக்கு சென்றனர்.
அப்போது ஒரு பெண் சாமியார் கருப்பு சாமிக்கு பூஜை செய்து கொண்டிருந்தார். வாட்ட சாட்டமாக இருந்த அந்த பெண் சாமியாரை பற்றிய விபரங்கள் எதுவும் கிராம மக்களுக்கு தெரியவில்லை. ஆனால் விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் கிடா விருந்து பரிமாறப்பட்டது. அது மட்டுமில்லாமல் மறு வெள்ளிக்கிழமையும் தவறாமல் வாருங்கள், கிடா விருந்து சாப்பிட்டு செல்லுங்கள் என கூறியுள்ளனர்.
அதைத்தொடர்ந்து அடுத்த வெள்ளிக்கிழமையும் கிராம மக்கள் கிடா விருந்து ஆசையால் சென்றனர். ஆனால் அடுத்த வாரம் சென்றபோது பெண் சாமியாரின் தோற்றம் மாறி இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். கருப்பு சேலை கட்டி, ஆணி செருப்பை அணிந்து கொண்டு ஒரு கையில் பெரிய அரிவாளும், மற்றொரு கையில் சுருட்டும் வைத்துக் கொண்டு ஆவேசமாக நிற்பதைக் கண்டு வெல.. வெலத்து போனதாக பூஜையில் பங்கேற்றவர்கள் தெரிவித்தனர்.
மேலும் அவர்கள் கூறும்போது, பொதுமக்களை பார்த்து நாக்கை துருத்தி துருத்தி ஆத்தா கிட்ட வாங்கடா என அந்த பெண் சாமியார் அலறவும், நாங்கள் பயந்து ஓட பார்த்தோம். அங்கிருந்த சாமியாரின் ஆட்கள் எங்களை பார்த்து பயப்படாதீர்கள், ஆத்தா உங்களுக்கு இலவசமாக அருள்வாக்கு சொல்லத்தான் கூப்பிடுகிறது என்றார்கள். அன்றைக்கும் ருசியாக கிடா விருந்து கிடைத்தது.
இந்த விஷயம் ஊருக்குள் பரவ தொடங்கியதும் உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து கூட்டம் குவிய தொடங்கிவிட்டது. நாட்கள் செல்லச்செல்ல பெண் சாமியாரின் சுயரபம் தெரிய வந்தது. ஆத்தாளுக்கு ரம் பாட்டில், அதிலும் ஓல்ட் மங்க் புல் ரம் பாட்டில் வாங்கி வாங்கடா... என பக்தர்களிடம் கேட்கத்தொடங்கினார்.
அவரின் அருள்வாக்கு ஒரு சிலருக்கு பலிக்கவே சுருட்டு, சரக்கு பற்றி பக்தர்களும் கண்டுகொள்ளவில்லை. கேட்பதையெல்லாம் வாங்கி கொடுத்து வந்தனர். இதனால் அங்கு பாட்டில்களும், பணமும் கொட்டோகொட்டென்று கொட்டத் தொடங்கியது. இதையடுத்து நிலத்தை வாங்கிய தொழில் அதிபர்கள் அந்த பெண் சாமியாருக்கு ஜீப் ஒன்றையும் வாங்கி கொடுத்துள்ளனர்.
இதில் கம்பீரமாக ஏறி உட்காந்து அவர் வலம் வந்தார். மேலும் வசூல் ஆகும் தொகையில் ஒரு பங்கை மட்டும் சாமியாருக்கு கொடுத்துவிட்டு மீதம் தொகையை அவர்கள் எடுத்துக்கொண்டதாக கூறப்படுகிறது. இவ்வாறு 4, 5 ஆண்டுகள் பெண் சாமியாரும், அந்த நிலத்தின் உரிமையாளர்களும் குஷியாக இருந்தனர்.
இந்த நிலையில் 2020-ல் கொரோனா வைரஸ் தாக்கியதும் பக்தர்கள் வருகை நின்றுவிட்டது. கொரோனாவுக்கு பின்னர் பழையபடி பக்தர்கள் வருவார்கள் என தொழிலதிபர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அவர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை. வெள்ளிக்கிழமைகளில் ஐந்தாறு பேர் மட்டுமே வருகை தருகிறார்கள்.
அதைத்தொடர்ந்து நிலத்தை வாங்கிய கரூர் தொழில் அதிபர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த பெண் சாமியாரை துரத்த முயற்சி செய்ததாகவும் தகவல் வெளியானது. இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பெண் சாமியார் என்னை முதலீடா வச்சு லட்சக்கணக்கில் பணம் சம்பாதித்து விட்டு இப்ப என்னையே காலி பண்ண சொல்றீங்களாடா? நான் நினைத்தேன் என்றால் உங்களை காலி பண்ணிடுவேன் என்று பேசி உள்ளார்.
அதைத்தொடர்ந்து சாமியார் தரப்புக்கும், நிலத்தை வாங்கிய தொழிலதிபர்களுக்கும் இடையே சமரச பேச்சுவார்த்தை நடந்துள்ளது. ஆனால் பெண் சாமியாரை செல்வந்தர்கள் சிலர் ஆதரிப்பதால் கரூர் தொழிலதிபர்கள் செய்வது அறியாமல் திகைத்து வருவதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.
இது தொடர்பாக பெண் சாமியார் கூறும் போது, நான் குறி சொன்னபோது வருமானம் கொட்டியது, அப்போது அவர்களுக்கு இனித்தது. கூட்டம் இல்லை என்றவுடன் என்னை துரத்த பார்க்கிறார்கள். இந்த இடத்தின் விலைக்கு மேலேயும் சம்பாதித்து கொடுத்து விட்டேன். இடத்தை காலி பண்ண முடியாது. முடிந்ததை அவர்கள் பார்த்துக் கொள்ளட்டும் என ஆவேசமாக கூறினார்.
இந்த விவகாரத்தால் அந்த பெண் சாமியாரின் விவகாரம் அரவக்குறிச்சி பகுதியில் பேசும் பொருளாக மாறி உள்ளது.