தமிழ்நாடு செய்திகள்

முறைப்படி குடியுரிமை பெறாமல் இந்திய பாஸ்போர்ட் பெற்று மதுரையில் தங்கிய இலங்கை பெண் சிக்கினார்

Published On 2023-09-03 11:14 IST   |   Update On 2023-09-03 11:14:00 IST
  • இலங்கை செல்வதற்காக வந்த ஒரு பெண்ணின் ஆவணங்களை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
  • போலீசார் அவரை கைது செய்து மோசடி தொடர்பாகவும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை:

மதுரையில் இருந்து நேற்று இலங்கைக்கு விமானம் புறப்பட தயாராக இருந்தது. பயணிகளின் பாஸ்போர்ட், விசா உள்ளிட்ட ஆவணங்களை விமான நிலைய அதிகாரிகள் தீவிர சோதனை செய்து விமானத்தில் ஏற அனுப்பி கொண்டிருந்தனர். அப்போது இலங்கை செல்வதற்காக வந்த ஒரு பெண்ணின் ஆவணங்களை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அவர் பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களை அதிகாரிகளிடம் கொடுத்தார். அதில் மதுரையில் தங்கியிருப்பதற்கான முகவரிகள் இருந்தன. ஆனால் அந்த பெண் இலங்கை தமிழ் பேசியதால் அவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அதிகாரிகள் அந்த பெண்ணிடம் தீவிர விசாரணை நடத்தினர்.

அப்போது அவர் இலங்கையை சேர்ந்த உமாவதி என தெரியவந்தது. இவர் கடந்த 2015-ம் ஆண்டு மதுரை புதூரை சேர்ந்த பிரதாப்குமார் என்பவரை திருமணம் செய்துள்ளார். ஆனால் அவர் முறைப்படி இந்திய குடியுரிமை பெறாமல் திருமணமான பதிவை வைத்து ஆதார், பான்கார்டு, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்டவை பெற்று அதன் மூலம் இந்திய பாஸ்போர்ட்டையும் விண்ணப்பித்து பெற்றது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் உமாவதியை அவனியாபுரம் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவரை கைது செய்து மோசடி தொடர்பாகவும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News