தமிழ்நாடு

சோலையார் அணை நிரம்பி காணப்படும் காட்சி.

தொடர் மழையால் மீண்டும் 160 அடியை எட்டிய சோலையார் அணை

Published On 2022-11-15 03:58 GMT   |   Update On 2022-11-15 03:58 GMT
  • கடந்த சில தினங்களாக வால்பாறை மற்றும் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
  • மழை காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளது.

வால்பாறை:

கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ளது சோலையார் அணை. இந்த அணை ஆசியாவின் 2-வது ஆழமான அணையாகும்.

பரம்பிக்குளம்-ஆழியாறு பாசன திட்டத்தின் உயிர் நாடியாக உள்ள சோலையார் அணை மூலம் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் 3.77 லட்சம் ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெற்று வருகின்றன.

இந்த அணையின் நீர்மட்டம் மொத்தம் 160 அடியாகும். அணை முழு கொள்ளளவை எட்டியதும், உபரி நீர் தானாக சேடல் பகுதியில் வழிந்து பரம்பிக்குளம் அணைக்கு சென்று விடும்.

கடந்த தென்மேற்கு பருவமழையால் அணையின் நீர் மட்டம் ஜூன் மாதம் 11-ந்தேதி முழு கொள்ளளவை எட்டியதை தொடர்ந்து அணை திறக்கப்பட்டது. அன்று முதல் இந்த மாதம் 6-ந்தேதி வரை 147 நாட்கள் சோலையார் அணையின் நீர்மட்டம் 160 அடியாகவே இருந்தது.

அதன் பின்னர் மழை குறைந்ததால் அணையின் நீர்மட்டமும் குறைய தொடங்கியது. கடந்த 7-ந்தேதி அணையின் நீர்மட்டம் 159.9 அடியாகவும், 12-ந்தேதி 158 அடியாகவும் குறைந்தது.

இந்த நிலையில் கடந்த சில தினங்களாக வால்பாறை மற்றும் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்த மழை காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளது.

நேற்று 2 அடி உயர்ந்து சோலையார் அணை மீண்டும் 160 அடியை எட்டியது. அணைக்கு வினாடிக்கு 523 கனஅடி நீர் வந்தது. அணையின் நீர்மட்டம் 160.3 அடியாக உள்ளது. 5400 மி.கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது.

இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 160.45 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 272 கனடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. 150.58 கனடி நீர் வெளியேற்றப்படுகிறது.

வால்பாறை சுற்றுவட்டாரத்தில் நேற்று பெய்த மழை அளவு மி.மீட்டரில் வருமாறு:-

சோலையார் அணை-28, மேல்நீரார்-5, கீழ்நீரார்-11, வால்பாறை-6.

Tags:    

Similar News