தமிழ்நாடு செய்திகள்

24 மணிநேரமும் பால் கறக்கும் தெய்வீக பசு- காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கும் மக்கள்

Published On 2022-11-04 12:55 IST   |   Update On 2022-11-04 12:55:00 IST
  • எந்தநேரம் கறந்தாலும் பால் வருவதால் அப்பகுதி மக்களும் அந்த பசுவை ஆச்சரியத்துடன் வணங்கி வருகின்றனர்.
  • பசுவுக்கு புல்கட்டு, கீரை மற்றும் தீவனங்களை கொடுத்து அதன் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்று வருகின்றனர்.

வடமதுரை:

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள நந்தவனப்பட்டியை சேர்ந்தவர் பெருமாள்(50). இவரது மனைவி மயில்(46). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். பெருமாள் விவசாயம் பார்த்து வருவதோடு கால்நடைகளையும் வளர்த்து வருகிறார்.

சிறுவயது முதல் ஒரு கன்றுகுட்டிைய வாங்கி வளர்த்து வந்த அவர் தற்போது தெய்வீக தன்மையுடன் காணப்படுவதை அறிந்தார். கடந்த பல மாதங்களாக எவ்வித கன்றும் ஈன்றாமல் சினை ஊசி போடாமலும் 24 மணிநேரமும் அந்த பசு பால் தந்தவண்ணம் உள்ளது.

எந்தநேரம் கறந்தாலும் பால் வருவதால் அப்பகுதி மக்களும் அந்த பசுவை ஆச்சரியத்துடன் வணங்கி வருகின்றனர். மேலும் தங்கள் குடும்பத்தில் ஏதேனும் பிரச்சினை இருந்தால் அந்த பசுவுக்கு புல்கட்டு, கீரை மற்றும் தீவனங்களை கொடுத்து அதன் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்று வருகின்றனர்.

தினந்தோறும் பசுவை குளிப்பாட்டி மஞ்சள் பூசி அலங்கரித்து வைத்துள்ளனர். பசு கறக்கும் பாலினையே அங்கு வரும் பொதுமக்களுக்கு காய்ச்சி குடிப்பதற்கு பெருமாள் கொடுத்து வருகிறார். அந்த பாலினை அருந்தும் பொதுமக்களும் அமிர்தம்போல் உள்ளதாக தெரிவிக்கின்றனர். பசுவிடம் வைத்த கோரிக்கை உடனுக்குடன் நிறைவேறி வருவதால் தெய்வீக தன்மை கொண்ட அந்த பசுவை காண பல்வேறு ஊர்களில் இருந்து வந்து வழிபட்டு செல்கின்றனர்.

இதுகுறித்து பெருமாள் தெரிவிக்கையில், கூலிவேலை பார்த்து வந்த தான் பலவித பிரச்சினைகளில் சிக்கி கஷ்டப்பட்டு வந்தேன். இந்த பசு வந்தபிறகு அனைத்து பிரச்சினைகளும் தீர்ந்துள்ளது. தற்போது ஒரு முதலாளி ஆனதுபோல் நம்பிக்கையோடு உள்ளேன். எங்களை பார்த்து இந்த பசுவை காண தினந்தோறும் பல்வேறு ஊர்களில் இருந்து பொதுமக்கள் வந்து செல்கின்றனர். அதன்மூலம் அவர்கள் நன்மை அடைந்து வருகின்றனர். இது எங்களுக்கும் மகிழ்ச்சியாக உள்ளது என்றார்.

Similar News