தமிழ்நாடு

பாராளுமன்ற தேர்தல் நடத்தை விதிகள் அமல்- மதுரை மாவட்டம் முழுவதும் பறக்கும் படையினர் வாகன சோதனை

Published On 2024-03-17 08:33 GMT   |   Update On 2024-03-17 08:33 GMT
  • வாகனங்களில் அரசியல் கட்சி சார்ந்த கொடிகள் கட்டப்பட்டிருந்தால் உடனடியாக அகற்றப்பட்டு வருகிறது.
  • காவல்துறை தரப்பில் தேர்தல் நடத்தை விதிகள் குறித்து உரிய அறிவுரைகள் பிறப்பிக்கப்பட்டு விதிகளை மீறி ஆவணங்கள் இன்றி பொருட்கள் எடுத்துவந்தால் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.

மதுரை:

பாராளுமன்ற தேர்தல் தேதி நேற்று மாலை அறிவிக்கப்பட்ட நிலையில் இரவு முதல் மதுரை மாவட்டத்தில் மதுரை, விருதுநகர், தேனி ஆகிய 3 பாராளுமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட 10 சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளிலும் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்தது. இதையடுத்து பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் தலா 3 பறக்கும் படையினர் மற்றும் 3 நிலையான கண்காணிப்புக்குழு மற்றும் வீடியோ கண்காணிப்பு குழு ஆகியோருடன் இணைந்து ஒவ்வொரு பகுதிகளிலும் தீவிர சோதனை நடத்தி வருகிறார்கள்.

இந்த வாகன தணிக்கையின்போது காவல் துறையினர் மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் அடங்கிய பறக்கும் படையினர் 49 ஆயிரம் ரூபாய்க்கு மேல் உரிய ஆவணங்கள் இன்றி பணம் எடுத்து வந்தால் உடனடியாக பறிமுதல் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். மேலும் 49 ஆயிரத்திற்கு அதிகமான பணம் எடுத்துவந்தால் உரிய ஆவணங்களை காண்பித்து பின்பு பணத்தினை பெற்று செல்வதற்கான சிறப்பு குழுவானது அமைக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று வாகனங்களில் அரசியல் கட்சி சார்ந்த கொடிகள் கட்டப்பட்டிருந்தால் உடனடியாக அகற்றப்பட்டு வருகிறது. சரக்கு வாகனங்களில் வாக்காளர்களுக்கு ஏதேனும் பரிசுப் பொருட்கள் எடுத்துசெல்லப்படுகிறதா? எனவும் சோதனை நடத்தி வருகின்றனர். காவல்துறை தரப்பில் தேர்தல் நடத்தை விதிகள் குறித்து உரிய அறிவுரைகள் பிறப்பிக்கப்பட்டு விதிகளை மீறி ஆவணங்கள் இன்றி பொருட்கள் எடுத்துவந்தால் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.

மேலும் ஒவ்வொரு பகுதிகளிலும் உள்ள அரசியல் கட்சி அலுவலகங்கள், சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் நிலையான கண்காணிப்பு குழுவினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News