கல்லூரி உதவி பேராசிரியர்கள் 5,408 பேருக்கு இடமாறுதல் கலந்தாய்வு- அமைச்சர் பொன்முடி
- கல்லூரி ஆசிரியர்களின் நீண்ட கால கோரிக்கையான இடமாறுதல் கலந்தாய்வு நடத்தப்படுகிறது.
- 5 வருடமாக நடைபெறாமல் இருந்த கவுன்சிலிங் தற்போது ஆன்லைன் வழியாக இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
சென்னை:
சென்னை கிண்டியில் உள்ள தொழில்நுட்ப கல்வி இயக்குனரகத்தில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி நிருபர்களிடம் கூறியதாவது:-
பொறியியல் கலந்தாய்வு 4-வது சுற்று வருகிற 14-ந்தேதி தான் நிறைவடைகிறது. இதுவரையில் 89,585 பேர் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர். சென்ற ஆண்டு 80,383 பேர் சேர்ந்து இருந்தனர். 10 ஆயிரம் பேர் அதிகமாக சேர்ந்து இருக்கிறார்கள். 4-வது சுற்றிலும் மாணவர்கள் சேர உள்ளனர்.
அதன் பின்னர் துணை கலந்தாய்வு காலி இடங்களுக்கு நடைபெறும். இந்த ஆண்டு அதிக மாணவர்கள் சேர்க்கப்படுகிற நிலை உருவாக்கப்பட்டுள்ளது. கல்லூரி ஆசிரியர்கள் 4000 பேர் தேர்வு செய்வதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் விரைவில் இதற்கான பணி தொடங்கும். கெஸ்ட் விரிவுரையாளர் தேர்வு செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கல்லூரி ஆசிரியர்களின் நீண்ட கால கோரிக்கையான இடமாறுதல் கலந்தாய்வு நடத்தப்படுகிறது. 5 வருடமாக நடைபெறாமல் இருந்த கவுன்சிலிங் தற்போது ஆன்லைன் வழியாக இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. 5,408 உதவி பேராசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்விற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
3 ஆயிரம் காலி இடங்கள் உள்ளன. விரும்பும் இடங்களை பெறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 10 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். சீனியாரிட்டி அடிப்படையில் காலி இடங்களுக்கு மாறுதல் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.