தமிழ்நாடு

நாகையில் இருந்து இலங்கைக்கு அக்டோபரில் பயணிகள் கப்பல்: அமைச்சர் எ.வ.வேலு தகவல்

Published On 2023-09-20 07:08 GMT   |   Update On 2023-09-20 07:08 GMT
  • பயணியர் கப்பல் போக்குவரத்தை நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இயக்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.
  • தமிழ்நாடு அரசுடன் இணைந்து பயணிகள் கப்பல் போக்குவரத்தினைத் துவக்க ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது.

நாகை:

அமைச்சர் எ.வ.வேலு இன்று நாகப்பட்டினம் துறைமுகத்தில் நடைபெற்று வரும் பணிகளை ஆய்வு செய்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து, இலங்கையில் உள்ள காங்கேச துறைமுகத்திற்கு 150 பயணிகள் பயணிக்கும் விரைவு பயணியர் கப்பல் இயக்குவதற்கான நடவடிக்கைகள் தமிழ்நாடு கடல்சார் வாரியம், ஒன்றிய அரசின் துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிப் போக்குவரத்து துறை மற்றும் வெளியுறவுத் துறை மூலம் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்திய கப்பல் போக்குவரத்து கழகம் விரைவு பயணியர் கப்பல் போக்குவரத்தை நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இயக்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.

இந்த பயணியர் கப்பல் பயணம், வெளிநாட்டு பயணம் என்பதால் ஒன்றிய அரசின் சி.ஐ.எஸ்.எப். பாதுகாப்பு அதிகாரிகள் மூலம் கையாள ஒன்றிய அரசிடம் வலியுறுத்தப்பட்டு உள்ளது.

நாகப்பட்டினம் துறைமுகத்தில் அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு அக்டோபர் மாதம் முதல் வாரத்தில், தமிழ்நாடு அரசுடன் இணைந்து பயணிகள் கப்பல் போக்குவரத்தினைத் துவக்க ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது.

இலங்கை மக்கள் குறிப்பாக, தமிழ் மக்கள் தங்களின் கல்வி, மருத்துவம், உணவுப் பொருட்கள், வணிகம், ஆன்மீகம் மற்றும் சுற்றுலா ஆகிய தேவைகளுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைவதுடன், தமிழ்நாட்டில் உள்ள டெல்டா மாவட்டங்கள் குறிப்பாக ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்ட பகுதிகள், கலாச்சாரப் பகிர்வு, பொருளாதாரம் ஆகியவற்றில் மிகப்பெரிய வளர்ச்சியைப் பெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News