மேட்டுப்பாளையம்- குன்னூர் மலை ரெயில் சேவை இன்று ரத்து
- நீலகிரி மாவட்டத்தில் குன்னூர், பர்லியாறு, கரன்சி, ஆர்டர்லி, ஹில்குரோவ் பகுதிகளில் நேற்று தொடர்ந்து கனமழை பெய்து வந்தது.
- நடுக்காட்டில் நின்ற பயணிகள் மீண்டும் மேட்டுப்பாளையம் ரெயில் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.
மேட்டுப்பாளையம்:
மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக பகல் மற்றும் இரவு நேரங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் குன்னூர், பர்லியாறு, கரன்சி, ஆர்டர்லி, ஹில்குரோவ் பகுதிகளில் நேற்று தொடர்ந்து கனமழை பெய்து வந்தது.
மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு இன்று காலை 7.10 மணிக்கு மலை ரெயில் புறப்பட்டது. இந்த மலைரெயிலில் 186 பயணிகள் பயணித்தனர்.
அப்போது ரெயில் ஆர்டர்லி அருகே சென்றபோது தண்டவாளத்தில் மண் சரிவு ஏற்பட்டு பாறை மற்றும் மண் கிடந்தது.
இதை பார்த்த ரெயில் என்ஜின் டிரைவர் உடனடியாக ரெயிலை நிறுத்தினார். தொடர்ந்து லாவகமாக பின்னோக்கி இயக்கி வந்தார்.
மேலும் இது தொடர்பாக உடனடியாக ரெயில்வே நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு ரெயில்வே பணிமனை ஊழியர்கள் விரைந்து வந்தனர்.
அவர்கள் தண்டவாளத்தில் சரிந்து வந்து விழுந்த பாறை, மண்ணை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் நடுக்காட்டில் நின்ற பயணிகள் மீண்டும் மேட்டுப்பாளையம் ரெயில் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டனர். அதன்பின் பஸ் மூலம் ஊட்டிக்கு பயணிகளை அனுப்பி வைத்தனர்.
மேலும் தண்டவாளத்தில் மண், பாறை சரிந்து விழுந்ததால் மேட்டுப்பாளையம்- குன்னூர் இடையே மலை ரெயில் சேவை இன்று ரத்து செய்யப்பட்டது. இதனால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.