தமிழ்நாடு

குட்கா தயாரிப்பாளர்களிடம் இருந்து விஜயபாஸ்கர் பணம் பெற்றார்- வருமான வரித்துறை பரபரப்பு குற்றச்சாட்டு

Published On 2022-12-02 11:12 GMT   |   Update On 2022-12-02 11:12 GMT
  • முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வரி ஏய்ப்பு செய்ததற்கான வலுவான ஆதாரங்கள் உள்ளன.
  • இதன் அடிப்படையிலேயே அவரது வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. சொத்துக்களும் முடக்கி வைக்கப்பட்டுள்ளன.

சென்னை:

அ.தி.மு.க. ஆட்சியில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த சி.விஜயபாஸ்கர் வீட்டில் கடந்த 2017-ம் ஆண்டு வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அப்போது வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் விஜயபாஸ்கரின் 4 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன.

2011-2012-ம் நிதி அண்டு முதல், 2018- 2019-ம் நிதி ஆண்டு வரையிலான கால கட்டத்தை கணக்கில் எடுத்து விஜயபாஸ்கரின் வருமானத்தை நிர்ணயம் செய்த அதிகாரிகள் அவருக்கு ரூ.206.42 கோடி அளவுக்கு வருமான வரியை விதித்தனர். இந்த பணத்தை விஜயபாஸ்கர் செலுத்தாததால் அவருக்கு சொந்தமான 17.46 ஏக்கர் நிலம் மற்றும் 4 வங்கி கணக்குகளை வருமான வரித்துறையினர் முடக்கி வைத்தனர்.

இதை எதிர்த்து விஜயபாஸ்கர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில் தனது தொகுதி பணிகளை மேற்கொள்வதற்கு வங்கி கணக்குகள் முடக்கப்பட்டது தடையாக உள்ளது என்றார். எனவே அதனை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி இருந்தார்.

இதற்கு பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டதை தொடர்ந்து வருமான வரித்துறை சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. வருமான வரித்துறை அதிகாரியான குமார் தீபக்ராஜ் தாக்கல் செய்துள்ள மனுவில், விஜயபாஸ்கர் பல்வேறு தரப்பில் இருந்தும் அதிக அளவில் பணம் வாங்கியது தொடர்பாக விரிவான பரபரப்பான தகவல்கள் இடம் பெற்றுள்ளன. அதன் விவரம் வருமாறு:-

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வரி ஏய்ப்பு செய்ததற்கான வலுவான ஆதாரங்கள் உள்ளன. இதன் அடிப்படையிலேயே அவரது வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. சொத்துக்களும் முடக்கி வைக்கப்பட்டுள்ளன.

விஜயபாஸ்கருக்கு எஸ்.ஆர்.எஸ். கனிமவள நிறுவனம் ரூ.85.45 கோடியை வழங்கி உள்ளது. அதற்கான ஆதாரங்கள் உள்ளன. அதே நேரத்தில் குட்கா வியாபாரிகளிடம் இருந்தும் விஜயபாஸ்கர் பணம் வாங்கியுள்ளார். அதற்கும் பல்வேறு ஆதாரங்கள் கிடைத்துள்ளன. குட்கா வியாபாரிகளிடம் இருந்து ரூ.2.45 கோடி பணம் பெற்றதற்கான ஆதாரங்களையும் நாங்கள் கைப்பற்றினோம். இதன் அடிப்படையிலேயே வருமான வரித்துறை நடவடிக்கை அவர் மீது பாய்ந்தது.

இப்படி பல்வேறு வழிகளில் இருந்தும் விஜயபாஸ்கருக்கு சட்ட விரோத அடிப்படையில் பணம் கொடுக்கப்பட்டுள்ளதை உறுதி செய்த பின்னரே சோதனை நடத்தி உரிய ஆவணங்களை கைப்பற்றினோம்.

எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக பதவியேற்ற போது அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் கிழக்கு கடற்கரை சாலையில் கூவத்துரில் உள்ள ரிசார்ட்டில் தங்கி இருந்தனர். அவர்களை தங்க வைத்தற்கான செலவு தொகையாக ரூ.30 லட்சத்து 90 ஆயிரத்தையும் விஜயபாஸ்கர் ரிசார்ட்டுக்கு வழங்கி உள்ளார். இதற்கான ஆவணங்களும் கிடைத்து உள்ளன.

இப்படி பல வழிகளில் அவர் பணம் வாங்கியதும், கொடுத்திருப்பதும் தெரியவந்துள்ளது. எனவே விஜயபாஸ்கரின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்.

இவ்வாறு வருமான வரித்துறை ஐகோர்ட்டில் தெரிவித்துள்ளது.

இதற்கு பதில் அளிக்க விஜயபாஸ்கர் அவகாசம் கேட்டதை தொடர்ந்து வழக்கு விசாரணை வருகிற 12-ந்தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.

Tags:    

Similar News