தமிழ்நாடு

வதிஷ்டபுரம் பீமன் ஏரி அருகில் குவியல் குவியலாக கிடக்கும் அரசு மருத்துவமனை மாத்திரை, மருந்துகள்

Published On 2024-04-23 06:31 GMT   |   Update On 2024-04-23 06:31 GMT
  • பல மாத்திரை அட்டைகளில் அதன் காலாவதி காலம் 2024-ம் ஆண்டு ஜூலை மாதம் வரை உள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
  • மாத்திரைகளை ஏரி பகுதி சாலை ஓரத்தில் கொண்டு வந்து கொட்டியது யார்?

திட்டக்குடி:

கடலூர் மாவட்டம், திட்டக்குடி அருகே வதிஷ்டபுரத்தில் உள்ள பீமன் ஏரி மற்றும் அதன் அருகில் உள்ள சாலை ஓரத்தில் அரசு மருத்துவமனைக்கு வழங்கப்பட்டு காலாவதியான மாத்திரைகள், ஓ.ஆர்.எஸ். பாக்கெட்டுகள் மற்றும் காலாவதி ஆவதற்கு 3 மாதங்கள் உள்ள அல்பெண்டாசோல் எனும் மாத்திரைகள் குவியல் குவியலாக கொட்டப்பட்டுள்ளன.

அந்த வழியாக சென்ற பொதுமக்கள் அதைக்கண்டு மருந்து, மாத்திரைகளை எடுத்து பார்த்தபோது, மாத்திரைகளின் அட்டை மற்றும் மருந்துகளின் மூடி ஆகியவற்றில் தமிழ்நாடு அரசு என்று அச்சிடப்பட்டிருந்தது.

இதையடுத்து அவை அரசு மருத்துவமனைகளில் வினியோகிக்கப்படும் மருந்து, மாத்திரைகள் என்பது தெரியவந்தது. மருந்து, மாத்திரைகள் அனைத்தும் ஒரே இடத்தில் கொட்டாமல், பரவலாக குவியல், குவியலாக கொட்டப்பட்டுள்ளது. இதில் ஒரு சில குவியல்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டிருந்தது.

இதில் சில மருந்துகள் கடந்த சில மாதத்துடன் காலாவதியாகி இருந்த நிலையில், பல மாத்திரை அட்டைகளில் அதன் காலாவதி காலம் 2024-ம் ஆண்டு ஜூலை மாதம் வரை உள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த மாத்திரைகளை ஏரி பகுதி சாலை ஓரத்தில் கொண்டு வந்து கொட்டியது யார்? காலாவதியான மருந்து, மாத்திரைகளை அப்புறப்படுத்துவதற்கு அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்துள்ள நிலையில் எந்த விதிமுறையும் பின்பற்றப்படாமல், அவற்றை தூக்கி வீசிச்சென்றது ஏன்? என்ற கேள்வி எழுந்துள்ளது.

மேலும் ஆற்றில் அவை வீசப்பட்டுள்ளதால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் சமூக ஆர்வலர்கள் வேதனையுடன் தெரிவித்தனர். எனவே ஏரி சாலை ஓரத்தில் கொட்டப்பட்டுள்ள மருந்து, மாத்திரைகளை அப்புறப்படுத்தி, அவற்றை அங்கு வீசிச்சென்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். காலாவதி ஆகாத அல்பெண்டாசோல் எனும் மாத்திரைகள், ஊசி மருந்து குப்பிகள், குளுக்கோஸ் பவுடர் உள்ளிட்டவையும் அப்பகுதியில் வீசப்பட்டுள்ள நிலையில், இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விசாரித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News