தி.மு.க.வினரின் ஜாமினை ரத்து செய்யக்கோரி வருமான வரித்துறை மனு: போலீசார் பதில் அளிக்க உத்தரவு
- போலீசார் தி.மு.க. கவுன்சிலர் உள்பட 15-க்கும் மேற்பட்ட தி.மு.க. வினர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
- சம்பந்தப்பட்ட நபர்கள் மற்றும் போலீசார் பதில் அளிக்கும்படி நீதிபதி உத்தரவிட்டு விசாரணையை ஒத்தி வைத்தார்.
மதுரை:
கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் மற்றும் அவரது உறவினர் வீடுகளில் கடந்த மே மாதம் 25-ந்தேதி வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இந்த சோதனையின் போது அங்கு கூடிய கூட்டத்தினர், வருமான வரித்துறை அதிகாரிகளை தாக்கி வாரண்ட் நகல், அரசு முத்திரைகள், வழக்கு தொடர்பான அரசு ஆவணங்கள், பென்டிரைவ் ஆகியவற்றை பறித்துச் சென்று, பென்டிரைவில் இருந்த தகவல்கள் முழுவதும் அழிக்கப்பட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து ஆவணங்களை பறித்து சென்றதாக தி.மு.க.வினர் மீது வருமான வரித்துறை அதிகாரிகள் சார்பில் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் தி.மு.க. கவுன்சிலர் உள்பட 15-க்கும் மேற்பட்ட தி.மு.க. வினர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
அவர்களுக்கு ஜாமின் அளித்தும், சிலருக்கு முன்ஜாமின் அளித்தும் கரூர் மாவட்ட கோர்ட் உத்தரவிட்டது. இந்த ஜாமின், முன்ஜாமினை மதுரை ஐகோர்ட்டு ரத்து செய்து, அவர்கள் அனைவரும் மீண்டும் கோர்ட்டில் ஆஜராகும்படி உத்தரவிடப்பட்டது. அதன்படி ஆஜரானவர்கள் சிறையில் அடைக்கப்பட்ட னர்.
தற்போது அவர்களில் ரீகன், ராஜா, சரவணன், ராமச்சந்திரன் உள்ளிட்ட நான்கு பேருக்கு கரூர் கோர்ட்டு மீண்டும் ஜாமின் அளித்தது. இதற்கு ஆட்சேபனை தெரிவித்தும், அந்த ஜாமினை ரத்து செய்யக்கோரியும் வருமான வரித்துறை அதிகாரிகள் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு நீதிபதி சிவஞானம் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சம்பந்தப்பட்ட நபர்கள் மற்றும் போலீசார் பதில் அளிக்கும்படி நீதிபதி உத்தரவிட்டு விசாரணையை ஒத்தி வைத்தார்.