தமிழ்நாடு

ரூ.10 கோடியுடன் பறிமுதல் செய்யப்பட்ட லாரி, கார்.


வேலூரில் ரூ.10 கோடி பறிமுதல்: ஹவாலா பணமா?- 4 பேரிடம் விசாரணை

Published On 2022-09-30 05:26 GMT   |   Update On 2022-09-30 05:26 GMT
  • பணம் மற்றும் கார், லாரி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
  • பறிமுதல் செய்யப்பட்ட பணம் வருமானவரித்துறை அதிகாரியிடம் ஒப்படைக்கப்படும்.

வேலூர்:

வேலூர் மாவட்டத்தில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு தடை செய்யப்பட்ட பிறகு போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆந்திர மாநில எல்லையில் உள்ள 7 சோதனை சாவடிகள் மற்றும் மாவட்ட எல்லைகளில் போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வேலூர் அடுத்த பள்ளிகொண்டா சுங்கச்சாவடியிலும் 24 மணி நேரம் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

நேற்று இரவு பள்ளிகொண்டா போலீசார் தேசிய நெடுஞ்சாலையில் ரோந்து சென்றனர். அப்போது பள்ளிகொண்டா அடுத்த கோவிந்தம்பாடியில் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டிய பகுதியில் ஒரு காரில் இருந்து லாரிக்கு 4 பேர் கும்பல் பொருட்களை ஏற்றி கொண்டிருந்தனர்.

இதனைக் கண்ட போலீசார் அங்கிருந்த 4 பேரை மடக்கி பிடித்தனர். அவர்கள் பிளாஸ்டிக் கவரில் செய்யப்பட்ட பண்டல்களை காரில் இருந்து லாரிக்கு மாற்றியது தெரிய வந்தது. போலீசார் அதனை பிரித்து பார்த்த போது அதில் கட்டு கட்டாக பணம் இருந்தது. இதனை பார்த்து போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.

அந்த பணத்திற்கு உரிய ஆவணங்கள் எதுவும் இல்லை. சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களிடம் விசாரித்த போது முன்னுக்கு பின் முரணாக தகவல் கூறினர்.

இதனைத் தொடர்ந்து பணம் மற்றும் கார், லாரி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். 4 பேரையும் பள்ளிகொண்டா போலீஸ் நிலையம் அழைத்து வந்தனர்.

அந்த பண்டல்களில் ரூ.10 கோடி பணம் இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் சம்பவ இடத்திற்கு சென்று 4 பேரிடமும் தனித்தனியாக விசாரணை நடத்தினார்.

ரூ.10 கோடிக்கு மேல் பணம் இருக்கலாம் என போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. காரில் இருந்து லாரியில் மாற்றப்பட்ட பண்டல்களில் எவ்வளவு பணம் உள்ளது என்பதை அறிவதற்காக எந்திரங்கள் மூலம் பணத்தை எண்ணும் பணி நடந்து வருகிறது. முழுமையான எண்ணிக்கை நடந்த பிறகு பணம் எவ்வளவு உள்ளது என்பது துல்லியமாக தெரியவரும்.

பிடிப்பட்ட பணம் ஹவாலா பணமாக இருக்கலாம் என போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. முதற்கட்ட விசாரணையில் பணத்தை கேரள மாநிலத்திற்கு கடத்தி செல்வது தெரிய வந்துள்ளது. அவர்கள் சென்னையில் இருந்து பணத்தை கேரளாவுக்கு கொண்டு சென்றனரா? அல்லது ஆந்திராவில் இருந்து கொண்டு சென்றனரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பறிமுதல் செய்யப்பட்ட பணம் வருமானவரித்துறை அதிகாரியிடம் ஒப்படைக்கப்படும். அதன் பிறகு பிடிபட்ட 4 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் வேலூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Similar News