அக்டோபர் 16-ந்தேதி முதல் சேலத்தில் இருந்து மீண்டும் விமான சேவை தொடக்கம்
- சேலம் காமலாபுரம் விமான நிலையத்திற்கு பெங்களூரில் இருந்தும், சேலத்தில் இருந்து கொச்சிக்கும் விமான சேவையை ஏர்லைன்ஸ் நிறுவனம் தொடங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
- சேலத்தில் இருந்து சென்னை வழியாக ஐதராபாத்திற்கு அக்டோபர் மாத இறுதியில் இண்டிகோ நிறுவனம் விமான சேவை தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சேலம்:
சேலத்திலிருந்து சென்னைக்கு மத்திய அரசின் உதய் திட்டத்தின் கீழ் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு விமான சேவை தொடங்கப்பட்டது. ஆனால் பொதுமக்களிடம் போதுமான வரவேற்பு இல்லாததால் தற்போது அந்த விமான சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
அந்த விமான சேவையை மீண்டும் தொடங்க வேண்டுமென தொழிலதிபர்கள், அரசியல் பிரமுகர்கள் உட்பட பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். மேலும் சேலத்தில் இருந்து வெளியூருக்கும், வெளியூர்களிலிருந்து சேலத்திற்கும் விமானங்கள் இயக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் சேலம் பார்த்திபன் எம்.பி., பலமுறை பாராளுமன்றத்தில் கோரிக்கைகளை முன் வைத்தார். அதன் தொடர்ச்சியாக அடுத்த மாதம் 16-ந்தேதி முதல் சேலத்தில் இருந்து மீண்டும் விமானம் இயக்கப்படுகிறது. சேலம் காமலாபுரம் விமான நிலையத்திற்கு பெங்களூரில் இருந்தும், சேலத்தில் இருந்து கொச்சிக்கும் விமான சேவையை ஏர்லைன்ஸ் நிறுவனம் தொடங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
மேலும், சேலத்தில் இருந்து சென்னை வழியாக ஐதராபாத்திற்கு அக்டோபர் மாத இறுதியில் இண்டிகோ நிறுவனம் விமான சேவை தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சேலம் மற்றும் அண்டை மாவட்டங்களைச் சேர்ந்த தொழிலதிபர்கள் அரசியல் பிரமுகர்கள், முக்கிய நபர்கள் வரவேற்று மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.