தமிழ்நாடு

டாக்டர் வீட்டில் 102 பவுன் நகை கொள்ளையடித்த வழக்கில் மகனுடன் தம்பதி கைது

Published On 2023-07-25 05:50 GMT   |   Update On 2023-07-25 05:50 GMT
  • தனிப்படை போலீசார் தருமபுரிக்கு விரைந்து சென்று அங்கு பதுங்கியிருந்த 3 பேரை கைது செய்தனர்.
  • 3 பேரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

சிவகிரி:

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் எஸ்.டி. நகர் புதுமனை 3-வது தெருவை சேர்ந்தவர் மணி வண்ணன் (வயது 38). சித்தா டாக்டரான இவர் அப்பகுதியில் சூப்பர் மார்க்கெட் நடத்தி வருகிறார்.

கடந்த 19-ந்தேதி இவர் வீட்டில் ஆட்கள் இல்லாததை அறிந்து மர்மநபர்கள் உள்ளே சென்று அங்குள்ள பீரோவில் இருந்த 102 பவுன் தங்க நகைகள், 263 கிராம் வெள்ளி உள்ளிட்டவைகளை கொள்ளையடித்து சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக வாசுதேவநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

கொள்ளையர்களை பிடிக்க சப்-இன்ஸ்பெக்டர் வேல்முருகன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். சம்பவம் நடந்த தெருவில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்தபோது, சந்தேகத்திற்கிடமாக 4 பேர் கொள்ளை நடந்த அன்று காலையில் சுற்றித்திரிந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த காட்சிகளை கொண்டு போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

அதில் வாசுதேவநல்லூர் அருகே தலையணை பகுதியில் வசிக்கும் ஒருவரை பிடித்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், கொள்ளை சம்பவத்தில் அவரது உறவினர்களான தருமபுரி மாவட்டம் அரூர் தாலுகா மலைதாங்கி கிராமத்தை சேர்ந்த நடராஜன் என்ற நிக்கல்சன்(வயது 50), அவரது மனைவி லலிதா(45), அவர்களது மகன் நவீன்குமார்(27) ஆகியோர் இந்த கொள்ளையில் ஈடுபட்டது தெரிய வந்தது.

இதையடுத்து தனிப்படை போலீசார் தருமபுரிக்கு விரைந்து சென்று அங்கு பதுங்கியிருந்த 3 பேரையும் கைது செய்தனர். இவர்களின் உறவினர்கள் வாசுதேவநல்லூர் தலையணையில் வசித்து வருவதால் அங்கு வந்துள்ளனர். பின்னர் அப்பகுதியில் உள்ள வீடுகளை நோட்டமிட்டு ஆட்கள் இல்லாததை அறிந்துள்ளனர்.

சம்பவத்தன்று மணிவண்ணன் வீட்டில் கொள்ளையடிப்பதற்கு முன்பாக அதே தெருவில் 3 வீடுகளின் கதவை உடைத்து பணம் திருடியுள்ளனர் என்பதும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களிடம் இருந்து ரூ.9 லட்சம் மதிப்பிலான நகைகளை மீட்டனர். இதையடுத்து 3 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News