தமிழ்நாடு
உயிரிழந்த மாடசாமி என்ற துரை-கல்யாணி தம்பதி.

மரணத்திலும் இணைபிரியாத தம்பதி: கணவர் மாரடைப்பால் பலி; அதிர்ச்சியில் மனைவியும் உயிரிழப்பு

Published On 2023-03-16 06:55 GMT   |   Update On 2023-03-16 06:55 GMT
  • கணவர் உடலை பார்த்து கதறி அழுதுகொண்டே இருந்த நிலையில் திடீரென கல்யாணி, அவரது கணவரின் உடலில் சாய்ந்த நிலையில் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
  • கணவர் இறந்த சிறிது நேரத்திலேயே மனைவியும் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

செங்கோட்டை:

தென்காசி மாவட்டம் செங்கோட்டை பகுதியில் கணவர் இறந்த அதிர்ச்சியில் மனைவியும் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த விபரம் வருமாறு:-

செங்கோட்டை அருகே உள்ள செல்வ விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் மாடசாமி என்ற துரை (வயது 58). வாடகை கார் ஓட்டுநராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி கல்யாணி(50).

இன்று அதிகாலை மாடசாமி என்ற துரை வீட்டில் இருந்தபோது அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. சிறிது நேரத்திலேயே அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

இதைப்பார்த்த கல்யாணி அதிர்ச்சி அடைந்து கதறி அழுதார். தனது கணவர் உடலை பார்த்து அவர் கதறி அழுதுகொண்டே இருந்த நிலையில் திடீரென கல்யாணி, அவரது கணவரின் உடலில் சாய்ந்த நிலையில் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

கணவர் இறந்த சோகத்தில் மனைவி உயிரிழந்த செய்தி அப்பகுதியில் காட்டுத்தீ போல் பரவியது. இதனால் அவர்களது வீட்டில் உறவினர்களும், அப்பகுதி மக்களும் அஞ்சலி செலுத்த குவிந்தனர்.

கணவர் இறந்த சிறிது நேரத்திலேயே மனைவியும் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News