தமிழ்நாடு செய்திகள்

முதியவர்களை கவுரவப்படுத்தும் விழா: மூதாட்டிகள் நடனமாடியதை கண்டு கண்கலங்கிய பெண் கலெக்டர்

Published On 2023-10-11 09:51 IST   |   Update On 2023-10-11 09:51:00 IST
  • கலெக்டர் அருணா, முதியோர்களுடன் அமர்ந்து ஒன்றாக உணவு சாப்பிட்டார்.
  • கலெக்டர் கண் கலங்கியதை பார்த்ததும், அங்கிருந்த சக அதிகாரிகள் மற்றும் மூதாட்டிகள் அவரை தேற்றி சமாதானப்படுத்தினர்.

ஊட்டி:

கூடலூர் நகராட்சிக்குட்பட்ட மேல் கூடலூரியில் ராமகிருஷ்ணா முதியோர் இல்லம் செயல்பட்டு வருகிறது.

இந்த முதியோர் இல்லத்தில், சமூக நலத்துறை சார்பில் உலக முதியோர் தினவிழா மற்றும் கலைஞர் நூற்றாண்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் கலெக்டர் அருணா கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து, அங்கிருந்த முதியவர்களுக்கு சால்வை அணிவித்து அவர்களை கவுரவப்படுத்தினார். மேலும் முதியோர் ஓய்வூதியம் பெறும் 100 வயதினை அடைந்த ஆண் மற்றும் 2 பெண் என மொத்தம் 3 முதியவர்களுக்கு ரூ.1,000 மதிப்பிலான சட்டை, வேட்டி மற்றும் துணிகளையும், பெண்களுக்கு ரூ.1000 மதிப்பிலான புடவையும், பெட்ஷீட்டுகளையும் வழங்கினார்.

பின்னர் கலெக்டர் அருணா, முதியோர்களுடன் அமர்ந்து ஒன்றாக உணவு சாப்பிட்டார். முன்னதாக முதியோர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

அப்போது மூதாட்டிகள் சிலர், தாயின் பெருமை பற்றிய பாடலை இசைக்கவிட்டு அதற்கு ஏற்ப நடனமாடினர். 'ஆசப்பட்ட எல்லாத்தையும் காசிருந்தா வாங்கலாம்... அம்மாவ வாங்க முடியுமா... நீயும் அம்மாவ வாங்க முடியுமா...' என்ற சினிமா பாடலும் ஒலிபரப்பப்பட்டு மூதாட்டிகள் நடனம் ஆடினார்கள். அந்த பாடல் வரிகளை கேட்டதும் கலெக்டர் அருணா திடீரென உணர்ச்சிவசப்பட்டு கண் கலங்கி விட்டார்.

சிறிது நேரம் கண் கலங்கியபடியே மூதாட்டிகளின் நடன நிகழ்ச்சியை கண்டு ரசித்தார். கலெக்டர் கண் கலங்கியதை பார்த்ததும், அங்கிருந்த சக அதிகாரிகள் மற்றும் மூதாட்டிகள் அவரை தேற்றி சமாதானப்படுத்தினர். இது அங்கிருந்தவர்களை நெகிழ்ச்சி அடைய செய்தது.

இதைத்தொடர்ந்து சிறப்பாக நடனம், பாட்டு பாடிய முதியோர்களின் திறமையை கலெக்டர் அருணா பாராட்டினார். இதில் கூடலூர் ஆர்.டி.ஓ. முகமது குதரதுல்லா, மாவட்ட சமூக நல அலுவலர் பிரவீனா தேவி, நாவா சங்க செயலாளர் ஆல்வாஸ், ஸ்ரீராமகிருஷ்ணா முதியோர் இல்ல நிர்வாகி வசந்தகுமாரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News