தமிழ்நாடு

தடுப்பு கட்டையில் மோதி 20 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து 3 பேர் பலி

Published On 2022-09-26 04:18 GMT   |   Update On 2022-09-26 04:18 GMT
  • உளுந்தூர்பேட்டை அருகே பு.மாம்பாக்கம் ரெயில்வே மேம்பாலத்தில் இன்று அதிகாலை 2 மணி அளவில் கார் வந்து கொண்டிருந்தது.
  • கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடி மேம்பாலத்தில் தடுப்பு கட்டையில் மோதி 20 அடி பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்தது.

உளுந்தூர்பேட்டை:

சென்னை ராயப்பேட்டையை சேர்ந்தவர் உஷேன் அவரது மனைவி ஷமீம் (வயது 50). இவர் தனது மகன் அம்ரீன் (22), உறவினர் மகன் சுபேதா (21), உறவினர் நசீம் ஆகியோருடன் திருச்சியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

நேற்று இரவு அவர்கள் சென்னை நோக்கி காரில் புறப்பட்டனர். இந்த காரை சென்னை ராயப்பேட்டையை சேர்ந்த டிரைவர் ஏஜாஷ் ஓட்டினார்.

இந்த கார் இன்று அதிகாலை 2 மணி அளவில் உளுந்தூர்பேட்டை அருகே பு.மாம்பாக்கம் ரெயில்வே மேம்பாலத்தில் வந்து கொண்டிருந்தது.

அப்போது கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. தறிகெட்டு ஓடிய அந்த கார் மேம்பாலத்தில் தடுப்பு கட்டையில் மோதி 20 அடி பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்தது. இந்த விபத்தில் ஷமீம், அம்ரீன், சுபேதா ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்கள்.

இவர்கள் தவிர கார் டிரைவர் ஏஜாஷ், நசீம் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் வலியால் துடித்தனர். சத்தம் கேட்டு அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஓடிவந்தனர். தகவல் அறிந்த உளுந்தூர்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழ்வாணன், சப்-இன்ஸ்பெக்டர் அருள் செல்வம், ஏட்டு சரவணன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

விபத்தில் பலியான 3 பேர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். விபத்தில் காயம் அடைந்த 2 பேரும் சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

விபத்து குறித்து உளுந்தூர்பேட்டை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News