தமிழ்நாடு

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 63 அடியாக சரிந்தது

Published On 2024-03-10 04:55 GMT   |   Update On 2024-03-10 04:55 GMT
  • காளிங்கராயன் பாசனத்திற்கு 100 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.
  • மழை பொழிவு இல்லாததாலும், நீர்வரத்து குறைந்ததாலும் மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

ஈரோடு:

ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

இந்நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த சில மாதங்களாகவே மழைப்பொழிவு இல்லாததால் அணைக்கு நீர்வரத்து குறைந்து வருகிறது. அதேநேரம் அணைக்கு வரும் நீர் வரத்தை விட பாசனத்திற்கு அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டமும் தொடர்ந்து குறைந்து வருகிறது.

இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 63.33 அடியாக குறைந்துள்ளது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 7 அடி வரை சரிந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 28 கனஅடி நீர் குறைந்து வருகிறது. கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு 2 ஆயிரத்து 300 கன அடி திறக்கப்பட்டுள்ளது.

காளிங்கராயன் பாசனத்திற்கு 100 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசனத்திற்கு 800 கனஅடியும், குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கன அடியும் என மொத்தம் 3 ஆயிரத்து 300 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

குண்டேரிபள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 39.22 அடியாகவும், பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் 2.06 அடியாகவும், வரட்டு பள்ளம் அணையின் நீர்மட்டம் 29.27 அடியாகவும் குறைந்து உள்ளது. மழை பொழிவு இல்லாததாலும், நீர்வரத்து குறைந்ததாலும் மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News