தமிழ்நாடு

திருமண வீட்டிற்குள் சுற்றி திரிந்த கரடி.

ஊட்டியில் திருமண வீட்டிற்குள் புகுந்த கரடியால் பரபரப்பு- காபி குடிக்கும் வீடியோ வைரல்

Published On 2022-09-02 04:15 GMT   |   Update On 2022-09-02 04:15 GMT
  • ஊட்டி அருகே உள்ள இத்தலார் பகுதியை சேர்ந்தவர் ஹட்டாரி நஞ்சன். நேற்று இவரது வீட்டில் திருமணம் நடைபெற்றது.
  • வீடே விழாக்கோலம் பூண்டிருந்தது. இரவில் அனைவரும் தூங்க சென்று விட்டனர்.

ஊட்டி:

நீலகிரி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிகளில் கரடி, சிறுத்தை, காட்டெருமை, யானை உள்பட பல்வேறு வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன.

இந்த வனவிலங்குகள் அவ்வப்போது வனத்தைவிட்டு வெளியேறி, மக்கள் வாழும் குடியிருப்பு பகுதிகளுக்குள் உணவு மற்றும் தண்ணீர் தேடி வருவதை வாடிக்கையாக வைத்துள்ளது.

இந்த நேற்று நள்ளிரவில் ஊட்டியில் கரடி ஒன்று குடியிருப்புக்குள் வந்து, அங்குள்ள வீட்டில் புகுந்து காபி குடித்து செல்லும் காட்சிகள் வைரலாகி வருகிறது.

ஊட்டி அருகே உள்ள இத்தலார் பகுதியை சேர்ந்தவர் ஹட்டாரி நஞ்சன். நேற்று இவரது வீட்டில் திருமணம் நடைபெற்றது. இதனால் வீடே விழாக்கோலம் பூண்டிருந்தது. இரவில் அனைவரும் தூங்க சென்று விட்டனர்.

நள்ளிரவு வேளையில் வீட்டிற்குள் இருந்து பாத்திரம் கீழே விழும் சத்தம் கேட்டது. இதனால் அனைவரும் திடுக்கிட்டு எழுந்தனர்.

சத்தம் வந்த இடம் நோக்கி சென்று பார்த்தபோது அதிர்ச்சியடைந்தனர். அங்கு கரடி ஒன்று நின்றிருந்தது. கரடி வீட்டில் வைத்திருந்த காபி கேனை கீழே தள்ளி காபியை குடித்து கொண்டிருந்தது.

இதனை அவர்கள் தங்கள் செல்போனில் வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்தனர். சிறிது நேரம் அங்கேயே சுற்றிய கரடி, பின்னர் அங்கிருந்து சென்று விட்டது.

இந்த வீடியோவை எடுத்தவர்கள், அதனை தற்போது சமூக வலைதளங்களில் திருமண வீட்டில் புகுந்து காபி குடிக்கும் கரடி என தலைப்பிட்டு பரவ விட்டுள்ளனர். தற்போது அந்த காட்சிகள் வேகமாக வைரலாகி வருகிறது.

Tags:    

Similar News