தமிழ்நாடு

சென்னை விமான நிலையத்தில் 2 ஓடுபாதைகளையும் ஒரே நேரத்தில் பயன்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை

Published On 2022-06-28 07:10 GMT   |   Update On 2022-06-28 07:10 GMT
  • விமான நிலையத்தில் உள்ள முதல் ஓடுபாதை முக்கியமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
  • சென்னை விமானநிலையத்தில் உள்ள 2 ஓடுபாதைகளையும் ஒரே சமயத்தில் பயன்படுத்த, சென்னை விமானநிலைய நிர்வாகம் தற்போது முடிவு செய்துள்ளது.

சென்னை விமான நிலையத்தில் விமானங்கள் தரையிறங்க,புறப்பட 2 ஓடுபாதைகள் உள்ளன. முதல் ஓடுபாதை 3.66 கி.மீட்டரும், 2-வது ஓடுபாதை 2.89 கி.மீட்டரும் உள்ளது.

இதில் முதல் ஓடுபாதையில் பெரிய ரக விமானங்கள் தரை இறங்கவும், புறப்படவும் பயன்படுத்தப்படுகின்றன. 2-வது ஓடுபாதையில் 76 பயணிகள் பயணிக்கக்கூடிய சிறிய ரக விமானங்கள் இயக்கப்படுகின்றன.

இதில் விமான நிலையத்தில் உள்ள முதல் ஓடுபாதை முக்கியமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. 2-வது ஓடுபாதை பகுதி அருகே கொளப்பாக்கம் பகுதியில், உயா்ந்த அடுக்குமாடி கட்டிடங்கள்,செல்போன் டவா்கள் போன்ற தடைகள் அதிகம் இருப்பதால், அதை முழுமையாக பயன்படுத்த முடியவில்லை.

தற்போது அவ்வப்போது முதல் ஓடுபாதையில் ஏதாவது பிரச்சினை ஏற்படும்போதும், செவ்வாய்,சனி பிற்பகலில் வாராந்திர பராமரிப்பு நடக்கும் போது மட்டும், 2-வது ஓடுபாதை பயன்படுத்தப்பட்டு வருகிறது.

ஒரே நேரத்தில் இயக்க முதல் ஓடுபாதை அளவுக்கு, 2-வது ஓடுபாதையின் நீளத்தை அதிகரிக்க இந்திய விமானநிலைய ஆணையம் ஏற்கனவே முடிவு செய்து இருந்தது.

இதற்காக, கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு, அப்போதைய மாநில அரசிடம் தேவையான நிலத்தை கையகப்படுத்தி கொடுக்கும்படி கேட்டது. ஆனால் அப்போதைய அரசு நிலம் கையகப்படுத்தி கொடுக்கவில்லை. அதோடு சென்னை அருகே ரூ.40 ஆயிரம் கோடியில் 2-வது விமான நிலையம் கட்டப்பட இருப்பதால் 2-வது ஓடுபாதையை நீட்டிக்கும் திட்டத்தை விமானநிலைய ஆணையம் கைவிட்டு விட்டது.

இந்தநிலையில், சென்னை விமான நிலையத்தில் உள்நாடு மற்றும் சா்வதேச விமானங்களின் எண்ணிக்கைகள் நாளுக்குநாள் அதிகரித்து வருவதை கணக்கிட்டு அதற்கு தகுந்தாற்போல் சென்னை விமான நிலையத்தில் விமான போக்குவரத்து இயக்கத்தை துரிதப்படுத்த இந்திய விமானநிலைய ஆணையம் முடிவு செய்துள்ளது.

இதையடுத்து சென்னை விமானநிலையத்தில் உள்ள 2 ஓடுபாதைகளையும் ஒரே சமயத்தில் பயன்படுத்த, சென்னை விமானநிலைய நிர்வாகம் தற்போது முடிவு செய்துள்ளது.

அதன்படி, முதல் பிரதான ஓடுபாதையை விமானங்கள் புறப்பாட்டிற்காகவும், 2-வது ஓடுபாதையை, விமானங்களை தரை இறக்கவும் மற்றும் சிறிய ரக விமானங்கள் புறப்பாடு ஆகிய இரண்டிற்கும் பயன்படுத்த திட்டமி டப்பட்டுள்ளது. இதுகுறித்து, சென்னை விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது:-

சென்னை விமான நிலையத்தில் உள்ள 2 ஓடுபாதைகளையும் ஒரே நேரத்தில் இயக்க விமான நிலைய நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

இதற்காக, சென்னை விமானநிலைய போக்கு வரத்து கட்டுப்பாட்டு அறையில் பணியாற்றும் அதிகாரிகளுக்கு சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. ஒரே நேரத்தில் இரண்டு ஓடுபாதைகளிலும், விமானங்களை இயக்குவது குறித்த பயிற்சி முடிந்ததும், அவற்றை முதலில் சோதனை அடிப்படையில் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அதன் பின்னர் 2 ஓடுபாதை களையும் நிரந்தரமாக பயன்பாட்டுக்கு கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை விமான நிலையத்தில் தற்போது, பிரதான முதல் ஓடுபாதையில், ஒரு மணி நேரத்தில், 30-க்கும் அதிகமான விமானங்கள் இயக்கப்படுகின்றன. 2 ஓடுபாதைகளும் ஒரே நேரத்தில் பயன்படுத்தும் போது, 50-க்கும் அதிகமான விமானங்களை ஒரு மணி நேரத்தில் இயக்க முடியும். இதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன.

சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் அதிகரித்து வரும் நிலையில் தற்போது உள்ள 2 ஓடுபாதைகளையும் ஒரே நேரத்தில் பயன்படுத்த வேண்டியது மிகவும் அவசியமாகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினா்.

விமானங்கள் விரைந்து வர இதேபோல் விமானநிலையத்தில் தரைஇறங்கும் விமானங்கள்,விரைந்து விமானங்கள் நிற்கும் நடைமேடைக்கு வருவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

சென்னை விமான நிலையத்தில், தரையிறங்கும் விமானங்கள், ஒரு ஓடு பாதையில் இருந்து, மற்றொரு ஓடு பாதைக்கு விரைவாக செல்ல, 'டாக்சி வே' எனும் இணைப்பு பாதை பயன்படுத்தப்படுகிறது. இந்த டாக்சி வே 'பி' என்ற 'பிராவோ', முதல் ஓடுபாதைக்கு, நேராக செல்லா மல், வளைந்து செல்லும் வகையில் இருந்தது.

இதனால் தரையிறங்கும் மற்றும் புறப்படும் விமானங்கள், டாக்சி வேயில் விரைவாக செல்ல முடியாத நிலை இருந்தது.

இந்த டாக்சி வே 'பி'யை நேர்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இது ஜூலையில் பயன்பாட்டுக்கு வருகிறது.

எனவே இனிமேல் விமானங்கள் தரை இறங்குவது, புறப்படுவது மேலும் வேகமாக இயக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

Tags:    

Similar News