நாராயணசுவாமி கோவிலில் பக்தர்களுக்கு அன்னதானமாக 8 ஆயிரம் புரோட்டா
- இளைஞர்கள் உதவியுடன் 200 கிலோ மைதா மாவில் சுமார் 8 ஆயிரம் புரோட்டாக்கள், சைவ குருமா தயாரிக்கப்பட்டு அன்னதானமாக வழங்கப்பட்டது.
- கோவிலில் புரோட்டா அன்னதானமாக வழங்கப்பட்டது முக்கூடல் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்தவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
நெல்லை:
நெல்லை மாவட்டம் முக்கூடலில் உள்ள பிரசித்திபெற்ற பழமையான கோவில்களில் ஒன்றான ஸ்ரீமன் நாராயணசுவாமி கோவிலில் ஆடி மாதம் 10 நாள் திருவிழா ஆண்டு தோறும் விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டு திருவிழா கடந்த 5-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் கோவிலில் உச்சிப்படிப்பு நடைபெற்ற நிலையில், 7-ந் திருநாளான நேற்று நாராயணர் கருட வாகனத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
விழாவில் புதிய முயற்சியாய், பக்தர்களுக்கு அன்னதானமாக புரோட்டா வழங்கப்பட்டது.
இதற்காக அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் உதவியுடன் 200 கிலோ மைதா மாவில் சுமார் 8 ஆயிரம் புரோட்டாக்கள், சைவ குருமா தயாரிக்கப்பட்டு அன்னதானமாக வழங்கப்பட்டது. தொடர்ந்து முக்கூடல் பகுதியை சேர்ந்த ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர்.
கோவிலில் புரோட்டா அன்னதானமாக வழங்கப்பட்டது முக்கூடல் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்தவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.