தமிழ்நாடு

சென்னை பெரியமேட்டில் இரும்பு வியாபாரி வெட்டிக் கொலை

Published On 2022-12-04 07:29 GMT   |   Update On 2022-12-04 07:29 GMT
  • பெரியமேட்டில் முனுசாமிைய கொலை செய்து விட்டு தப்பிச் சென்ற கொலையாளிகள் இவர்கள் என்பது தெரிய வந்தது.
  • கொலை சம்பவம் பெரியமேடு மற்றும் புளியந்தோப்பு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை:

சென்னை புளியந்தோப்பு ஏ.எம்.கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் முனுசாமி. 37 வயதான இவர் இரும்பு கடை வைத்து நடத்தி வருகிறார்.

நேற்று இரவு 10 மணி அளவில் முனுசாமியை அவரது நண்பர்கள் சிலர் வந்து அழைத்துச் சென்றனர். பெரியமேடு மூர்மார்க்கெட்டில் கோர்ட்டு கட்டிடத்தின் கீழ் செயல்பட்டு வரும் காம்ப்ளக்ஸ் பகுதிக்கு முனுசாமியை அழைத்துச் சென்றனர். அங்குள்ள 2-வது மாடியில் முனுசாமியை நண்பர்கள் சரமாரியாக அரிவாளால் வெட்டினார்கள். இதில் நிலைகுலைந்த அவரது உடலில் பல இடங்களில் வெட்டுக் காயங்கள் ஏற்பட்டன.

ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்த முனுசாமி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியானார். அவரது அலறல் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். அதற்குள் கொலையாளிகள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

பழைய செல்போன்களை வாங்கி விற்பனை செய்வது தொடர்பாக முனுசாமிக்கும், அவரது நண்பர்களுக்கும் இடையே தகராறு மற்றும் முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவே முனுசாமி கொலை செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

கொலை சம்பவம் பற்றி கேள்விப்பட்டதும் பெரியமேடு போலீசார் விரைந்து சென்று முனுசாமியின் உடலை கைப்பற்றி சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பிரேத பரிசோதனைக்கு பிறகு முனுசாமியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.

இதற்கிடையே தப்பி ஓடிய கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைத்து பெரியமேடு போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்த நிலையில் நேற்று இரவு திருவள்ளூர் நகர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அங்குள்ள காமராஜர் சிலை அருகில் நள்ளிரவு 1.30 மணி அளவில் இன்ஸ்பெக்டர் பத்மஸ்ரீ பபி தலைமையிலான போலீசார் வேகமாக வந்த ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அதில் இருந்து இறங்கி 2 பேர் தப்பி ஓடினர். இதனால் ஆட்டோவில் இருந்த மற்ற 4 பேரையும் போலீசார் மடக்கி பிடித்தனர். அப்போது பெரியமேட்டில் முனுசாமிைய கொலை செய்து விட்டு தப்பிச் சென்ற கொலையாளிகள் இவர்கள் என்பது தெரிய வந்தது.

இது தொடர்பாக கொடுங்கையூரைச் சேர்ந்த அஷ்ரப் அலி, எம்.ஆர். நகர் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன், புளியந்தோப்பைச் சேர்ந்த அப்பாஸ் மற்றும் அபி ஆகிய 4 பேர் சிக்கினர். அவர்களை கைது செய்த போலீசார் பெரியமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் தீபக்குமாரிடம் ஒப்படைத்தனர். இதைத் தொடர்ந்து 4 பேரையும் போலீசார் சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த கொலை சம்பவம் பெரியமேடு மற்றும் புளியந்தோப்பு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News