தமிழ்நாடு

தாசில்தார் குடியிருப்பில் பேய் நடமாடுவதாக பீதி- 11 ஆண்டுகளாக யாரும் குடியேறவில்லை

Published On 2023-06-17 05:15 GMT   |   Update On 2023-06-17 08:17 GMT
  • குடியிருப்பு பகுதியில் நள்ளிரவில் அமானுஷ்ய உருவங்கள், பேய்கள் நடமாடுவதாக வதந்தி பரவியது.
  • பேய் பீதியால் அரசு அதிகாரிகள் அஞ்சி நடுங்குவது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது

பேய்கள் பற்றிய பயம் உலகம் முழுவதும் இருக்கிறது. பேய் இருக்கா இல்லையா என்ற விவாதம் நீடித்து வருகிறது. தெய்வ சக்தி என்று ஒன்று இருக்கும் போது தீய சக்தியும் உள்ளது என ஆன்மீகவாதிகள் கூறுகின்றனர்.

அனைத்து மத வழிபாட்டு தலங்களிலும் பேய் ஓட்டுவது பேய்களை கட்டுப்படுத்துவது என சிறப்பு பூஜைகளும் நடந்து வருகிறது. சாலைகளில் பேய் நடமாட்டம், சுடுகாட்டு பகுதியில் பிசாசு நடமாடுகிறது என பல இடங்களில் பேய்களை கண்டதாகவும் கூறுகின்றனர். பேய்க்கு பயந்து வீடுகளை காலி செய்யும் நிலைமை உள்ளது.

வாடகை வீடுகளுக்கு செல்பவர்கள் இந்த வீட்டில் யாராவது தற்கொலை செய்திருக்கிறார்களா இளம் வயதினில் யாராவது இறந்தார்களா என கேள்வியை முன்வைத்த பிறகு வாடகை வீட்டில் குடியேறுகின்றனர்.

அந்த அளவுக்கு பேய் பயம் மனிதனை ஆட்கொண்டுள்ளது. அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என இருட்டை பார்த்து பயப்படுபவர்களும் அதிகமாக உள்ளனர். இதனால் வீடுகளில் முகப்புகளில் வேப்பிலை கட்டுவது வாசலுக்கு அருகில் செருப்பு துடைப்பம் போட்டு வைக்கும் சம்பவங்களும் நடந்து வருகிறது.

படித்தவர்கள் பெரும்பாலும் பேய் இருப்பதாக நம்புவதில்லை. ஆனால் திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கத்தில் பேய் இருப்பதாக கூறி அரசு குடியிருப்பில் அதிகாரிகள் தங்காமல் புறக்கணித்து வரும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கலசபாக்கத்தை தலைமை இடமாகக் கொண்டு தனி தாலுகா கடந்த 2012 -@ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது .கலசப்பாக்கம் சந்தைமேடு பகுதியில் செய்யாற்றின் கரையோரம் புதியதாக அலுவலகம் தாசில்தார் குடியிருப்பு கட்டப்பட்டது.

கடந்த 11 ஆண்டுகளில் தற்போது வரை 14 தாசில்தார்கள் பணிபுரிந்து வந்துள்ளனர். ஆனால் அந்த குடியிருப்பில் எந்த ஒரு தாசில்தாரும் வசிக்கவில்லை. இதற்கு காரணம் அந்த குடியிருப்பு பகுதியில் நள்ளிரவில் அமானுஷ்ய உருவங்கள், பேய்கள் நடமாடுவதாக வதந்தி பரவியது.

இதனால் அந்த குடியிருப்பில் எந்த அதிகாரியும் இதுவரை குடும்பத்துடன் குடியேறவில்லை என கூறுகின்றனர். இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில்-

இந்த கட்டிடம் கட்டி 11 ஆண்டுகள் ஆகிறது .ஆனால் எந்த அதிகாரியும் குடும்பத்துடன் தங்கவில்லை. ஒரே ஒரு தாசில்தார் மட்டும் பகலில் சிறிது நேரம் ஓய்வெடுத்து விட்டு சென்று விடுவார். அதன் பின்னர் யாரும் வருவதில்லை. அதிகாரிகளுக்கு பணி சுமை அதிகரித்து இரவு நீண்ட நேரம் ஆனாலும் யாரும் இங்கு தப்பி தவறி கூட தங்குவதில்லை. எவ்வளவு நேரம் ஆனாலும் அவரவர் வீட்டுக்கு சென்று விடுகின்றனர்.

இந்த குடியிருப்பு பகுதி அருகே குறிப்பாக அமாவாசை நாட்களில் அமானுஷ்ய உருவம், பேய்கள் உலாவி வருவதாக கூறுகின்றனர். குடியிருப்புக்கு சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் சுடுகாடு உள்ளது.

அங்கிருந்து இந்த குடியிருப்பு வரை அமாவாசை நாட்களில் பேய் உலவி வருகிறது. எனவே இரவு நேரங்களில் இங்கு நாங்கள் யாரும் செல்வதில்லை.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

பேய் பீதியால் அரசு அதிகாரிகள் அஞ்சி நடுங்குவது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது

Tags:    

Similar News