தமிழ்நாடு

சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் கொலை வழக்கில் கைதான ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்க ஆதரவாளர்கள் ஜெயிலில் உண்ணாவிரதம்

Published On 2023-02-26 10:25 GMT   |   Update On 2023-02-26 10:25 GMT
  • சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் கடந்த 2020-ம் ஆண்டு துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டார்.
  • நொறுக்கு தீனியை சாப்பிட்டுவிட்டு, உண்ணாவிரதம் இருப்பதாக பொய் சொல்கின்றனர் என்று ஜெயில் சூப்பிரண்டு கூறினார்.

சேலம்:

குமரி மாவட்டம் களியக்காவிளை சோதனை சாவடியில் பணியில் ஈடுபட்டிருந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் (வயது 57) கடந்த 2020-ம் ஆண்டு ஜனவரி மாதம் 8-ந் தேதி நள்ளிரவில் கத்தியால் குத்தியும், துப்பாக்கியால் சுட்டும் கொலை செய்யப்பட்டார்.

இதுதொடர்பாக கொலையாளிகள் குமரி மாவட்டம் திருவிதாங்கோட்டை சேர்ந்த அப்துல் சமீம்(32), கோட்டாறை சேர்ந்த தவுபிக் (32) ஆகியோரை கர்நாடகாவில் வைத்து போலீசார் கைது செய்தனர். இருவருக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ் என்ற பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு இருந்ததும், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சனை கொலை செய்தது போல் பல்வேறு இடங்களில் சதிச்செயல்களை அரங்கேற்ற திட்டமிட்டிருந்ததும் தெரியவந்தது.

இதனால் இந்த வழக்கு தேசிய புலனாய்வு பிரிவான என்.ஐ.ஏ.வுக்கு மாற்றப்பட்டது. பின்னர் அவர்கள் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய ஜெயிலில் உயர் பாதுகாப்பு அறையில், தனித்தனியே அடைக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள், சிறையில் கீழ் தள அறையில் அடைக்க வேண்டும், நடைபயிற்சி செல்ல அனுமதிப்பதோடு சக கைதிகளுடன் பேசி பழக ஒப்புதல் அளிக்க வேண்டும் எனக்கூறி நேற்று மதியம் முதல் உண்ணாவிரதம் மேற்கொண்டனர். இதை அறிந்த சிறை அதிகாரிகள், அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து உண்ணாவிரதத்தை கைவிட்டனர்.

இதுகுறித்து ஜெயில் சூப்பிரண்டு சண்முகசுந்தரத்திடம் கேட்டபோது அவர் தெரிவிக்கையில், இருவரும் முறையாக மனு அளிக்காமல் சிறை நிர்வாகத்தை மிரட்டி பார்க்கின்றனர். நொறுக்கு தீனியை சாப்பிட்டுவிட்டு, உண்ணாவிரதம் இருப்பதாக பொய் சொல்கின்றனர், என்றார்.

Tags:    

Similar News