தமிழ்நாடு செய்திகள்

மாணவி உயிரிழந்த விவகாரம்: மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் இன்று விசாரணை

Published On 2022-07-21 08:40 IST   |   Update On 2022-07-21 08:40:00 IST
  • மாணவி மரண வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
  • வரும் 27-ந் தேதி கள்ளக்குறிச்சியில் தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் விசாரணை நடத்த உள்ளது.

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி அருகே கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலை பள்ளி பிளஸ்-2 மாணவி ஸ்ரீமதி மரணத்துக்கு நீதிக்கேட்டு கடந்த 17-ந்தேதி நடந்த போராட்டம் கலவரத்தில் முடிந்தது. இதில் பங்கேற்க கலவரக்காரர்கள் சமூக வலைத்தளங்கள் மூலமாக திரட்டப்பட்டு வந்ததாக, போலீசார் தரப்பில் தெரிவித்தனர்.

கலவரம் தொடர்பான விசாரணை முடுக்கிவிடப்பட்டு, தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் கைது நடவடிக்கையில் போலீசார் இறங்கி இருக்கிறார்கள். மேலும் மாணவி மரண வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரத்தில் மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் கள்ளக்குறிச்சியில் இன்று நேரில் விசாரணை நடத்த உள்ளது. ஆணையத்தின் தலைவர் சரஸ்வதி மற்றும் உறுப்பினர்கள் நேரில் சென்று விசாரணை நடத்துகின்றனர்.

வரும் 27-ந் தேதி கள்ளக்குறிச்சியில் தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் விசாரணை நடத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News