தமிழ்நாடு

கிளாம்பாக்கத்தில் இருந்தே தென்மாவட்ட பேருந்துகள் புறப்படும்: அமைச்சர் சிவசங்கர்

Published On 2024-01-29 03:54 GMT   |   Update On 2024-01-29 06:07 GMT
  • கடந்த 24-ந் தேதி முதல் தனியார் ஆம்னி பஸ்கள் அனைத்தும் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படுகின்றன.
  • 160 பஸ்களின் நடைகள் மாதவரம் பஸ் நிலையத்தில் இருந்தும் இயக்கப்படும்.

சென்னை:

போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தின் தலைநகரமான சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு பயணம் செய்யும் பயணிகளின் வசதிக்காகவும் சென்னை மக்களின் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காகவும் வண்ட லூரை அடுத்து கிளாம்பாக்கத்தின் அதிநவீன கலைஞர் நூற்றாண்டு பஸ் நிலையம் கடந்த மாதம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்டது.

இதில் முதற்கட்டமாக அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் அனைத்து தடப்பஸ்களும் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படுகின்றன.

பின்னர் கடந்த 24-ந் தேதி முதல் தனியார் ஆம்னி பஸ்கள் அனைத்தும் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படுகின்றன.

இதன் தொடர்ச்சியாக நாளை முதல் (செவ்வாய்க்கிழமை) அனைத்து போக்குவரத்து கழகங்களை சார்ந்த தென் மாவட்டங்களுக்கு செங்கல்பட்டு, திண்டிவனம் வழியாக செல்லும் 710 பஸ்களின் புறப்பாடுகள் கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் இருந்து புறப்படும்.

மேலும், 160 பஸ்களின் நடைகள் மாதவரம் பஸ் நிலையத்தில் இருந்தும் இயக்கப்படும். கோயம்பேடு பஸ் நிலையத்திலிருந்து மேற்கண்ட செங்கல்பட்டு, திண்டிவனம் வழியாக இயக்கப்படும் பஸ்கள் நாளை முதல் இயக்கப்பட மாட்டாது.

மாதவரத்தில் இருந்து சேலம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கும்பகோணம், புதுச்சேரி, போளூர், திருச்சி, திருவண்ணாமலை, விருத்தாசலம், கடலூர், பண்ருட்டி ஆகிய வட மாவட்ட பகுதிகளுக்கு இயக்கப்படும்.

நாளை முதல் கிளாம்பாக்கத்தில் இருந்து 80 சதவீத பஸ்களும், மாதவரத்தில் இருந்து 20 சதவீத பஸ்களும் இயக்கப்படுகிறது. தென் மாவட்டங்களுக்கு பயணம் செய்வோர் இனி கோயம்பேடு பஸ் நிலையத்திற்கு செல்ல தேவையில்லை. கிளாம்பாக்கம் புதிய முனையத்திற்கு மட்டுமே செல்ல வேண்டும்.

கோயம்பேடு பஸ் நிலையத்திலிருந்து இ.சி.ஆர். வழியாக செல்லும் பஸ்களும் , பூந்தமல்லி வழியாக வேலூர், ஓசூர், ஆம்பூர், திருப்பத்தூர் இயக்கப்படும் பஸ்களும் வழக்கம் போல் இயக்கப்படும்.

மேற்கண்ட பஸ் இயக்கம் மாற்றத்தில் பயணிகள் வசதிக்காக விழுப்புரம் போக்குவரத்து கோட்ட பஸ்கள் மட்டும் தென் மாவட்டங்களில் இருந்து சென்னை நோக்கி செல்லும்போது, தாம்பரம் வரை இயக்கப்பட்டு பின் அங்கிருந்து கிளாம்பாக்கம் பஸ் நிலையத்திலிருந்து தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும். மேற்கண்ட தகவலின்படி மக்கள் பயணிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Tags:    

Similar News