தமிழ்நாடு

தேர்தல் பறக்கும் படை சோதனையில் திருச்சி தொழிலதிபரிடம் ரூ.1 லட்சம் பறிமுதல்

Published On 2023-02-08 08:45 GMT   |   Update On 2023-02-08 08:45 GMT
  • ரூ.50 ஆயிரத்திற்கு மேல் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் பணத்தை பறிமுதல் செய்து வருகின்றனர்.
  • பணத்திற்குரிய ஆவணங்கள் இல்லாததால் பறக்கும் படையினர் ரூ.1 லட்சத்தை பறிமுதல் செய்து தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் ஒப்படைத்தனர்.

ஈரோடு:

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27-ந் தேதி நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பு கடந்த மாதம் 18-ந் தேதி வெளியானது. அடுத்த நிமிடமே தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துவிட்டன.

தேர்தலில் பொதுமக்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் வகையில் 4 நிலை கண்காணிப்பு குழு, 3 பறக்கும் படை அமைக்கப்பட்டு அவர்கள் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் ஈரோடு கிழக்கு தொகுதி முழுவதும் தீவிர வாகன சோதனை ஈடுபட்டு வருகின்றனர். ரூ.50 ஆயிரத்திற்கு மேல் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் பணத்தை பறிமுதல் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று இரவு காளை மாட்டு சிலை அருகே பறக்கும் படை குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது ஒரு கார் வந்தது. அந்த காரை நிறுத்தி சோதனை செய்த போது அதில் ரூ.1 லட்சம் பணம் இருந்தது தெரிய வந்தது.

இது குறித்து காரில் வந்த நபரிடம் விசாரித்தபோது அவர் திருச்சியை சேர்ந்த செல்வக்குமார் என்பதும், சொந்தமாக தொழில் செய்து வருவதும் தெரிய வந்தது. தொழில் சம்பந்தமாக பணத்தை ஈரோடுக்கு கொண்டு வந்தபோது வாகன சோதனையில் சிக்கி உள்ளார்.

பணத்திற்குரிய ஆவணங்கள் இல்லாததால் பறக்கும் படையினர் ரூ.1 லட்சத்தை பறிமுதல் செய்து தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் ஒப்படைத்தனர். இதுவரை 22 லட்சத்து 97 ஆயிரத்து 840 ரூபாயை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

Tags:    

Similar News