தமிழ்நாடு

5 நாட்களுக்கு பின் இன்று கடலுக்கு சென்ற ராமேசுவரம் மீனவர்கள்: தனுஷ்கோடியில் கடல் கொந்தளிப்பு

Published On 2023-11-04 04:31 GMT   |   Update On 2023-11-04 04:31 GMT
  • 10 படகுகளை விடுவிக்க மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க கோரி ராமேசுவரம் மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை மேற்கொண்டனர்.
  • சுற்றுலா பயணிகள் கடலுக்குள் இறங்க வேண்டாம் என்று போலீசார் அறிவுறுத்தினர்.

ராமேசுவரம்:

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து கடந்த மாதம் 14-ந் தேதி மீன்பிடிக்க சென்றபோது 5 விசைப்படகுகளுடன் 27 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்து சென்றனர். இதே போன்று கடந்த மாதம் சனிக்கிழமை மீன்பிடிக்க சென்ற போது 5 விசைப் படகுகளுடன் 37 மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டனர்.

64 மீனவர்கள் மீது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இதே போன்று 10 விசைப்படகுகள் பறி முதல் செய்யப்பட்டுள்ளது.

இலங்கை அரசின் இந்த நடவடிக்கையை கண்டித்தும், கைது செய்யப்பட்டுள்ள 64 மீனவர்கள், 10 படகுகளை விடுவிக்க மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க கோரி ராமேசுவரம் மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை மேற்கொண்டனர்.

இதனைதொடர்ந்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் தலைமையில் நடைபெற்ற மீனவர்கள் பேச்சுவார்த்தை யில் உடன்பாடு ஏற்பட்ட நிலையில் மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.

இதனையடுத்து 5 நாட்களுக்கு பின் இன்று அதிகாலை முதல் ராமேசுவரத்தில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அனுமதி பெற்று கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இதனால் ராமேசுவரம் துறைமுகம் மீண்டும் பரபரப்பானது. ஆனாலும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் இன்று குறைந்த அளவே மீனவர்கள் கடலுக்கு சென்றனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று மாலை பரமக்குடி, திருவாடானை, ஏர்வாடி, கீழக்கரை உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இன்று காலையும் சில இடங்களில் மழை பெய்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. ராமேசுவரம் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது. தனுஷ்கோடியில் வழக்கத்தைவிட கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் கடலுக்குள் இறங்க வேண்டாம் என்று போலீசார் அறிவுறுத்தினர்.

Tags:    

Similar News