தமிழ்நாடு

மருத்துவ பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு வந்த ரவுடிகள்.

ராமஜெயம் கொலை வழக்கில் உண்மை கண்டறியும் சோதனைக்காக 6 ரவுடிகளுக்கு மருத்துவ பரிசோதனை

Published On 2022-11-18 07:58 GMT   |   Update On 2022-11-18 07:58 GMT
  • மீதமுள்ள 5 பேருக்கும் நாளை பரிசோதனை நடத்தப்படும் என சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.
  • ண்மை கண்டறியும் சோதனைக்கு ஒரு ரவுடி மட்டும் சம்மதம் தெரிவிக்கவில்லை.

திருச்சி:

தி.மு.க. முதன்மைச்செயலாளரும், நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சருமான கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் கொலை வழக்கினை சிறப்பு புலனாய்வு குழு விசாரித்து வருகிறது.

அதைத்தொடர்ந்து 13 ரவுடிகளை கண்டறிந்து அவர்களுக்கு உண்மை கண்டறியும் பரிசோதனை நடத்த குழு முடிவு செய்தது.

இதுதொடர்பாக திருச்சி நீதிமன்றத்தில் உண்மை கண்டறியும் சோதனைக்கு அனுமதி அளிக்குமாறு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதில் 12 ரவுடிகள் உண்மை கண்டறியும் சோதனைக்கு சம்மதம் தெரிவித்தனர். உண்மை கண்டறியும் சோதனைக்கு சம்மதம் தெரிவித்த 12 பேரும் திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு மருத்துவ அறிக்கையுடன் வருகிற 21-ந்தேதி குற்றவியல் நீதிமன்றம் எண் 6-ல் ஆஜராக நீதிபதி சிவகுமார் உத்தரவிட்டிருந்தார்.

இந்தநிலையில், அந்த 12 பேரில், சாமி ரவி, திலீப், சிவா ராஜ்குமார், சத்யராஜ், சுரேந்தர் ஆகிய 6 பேரும் இன்று காலை திருச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு வந்தனர். அவர்களுக்கு திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் பணியாற்றும் இதய நோய் நிபுணர், அறுவை சிகிச்சை நிபுணர், மனநல மருத்துவர், பொது மருத்துவர் என ஐந்து டாக்டர்கள் கொண்ட குழுவினர் பரிசோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.

இதில் 5 பேருக்கும், ரத்தப் பரிசோதனை, இ.சி.ஜி., எக்ஸ்ரே இதய பரிசோதனை மேற்கொள்ளப்படும் எனவும், அவர்கள் மனதளவில் சீராக உள்ளனரா என்பது கண்டறியப்படுகிறது. மருத்துவ பரிசோதனையானது சுமார் 2 மணி நேரம் நீடிக்கும் என மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

மீதமுள்ள 5 பேருக்கும் நாளை பரிசோதனை நடத்தப்படும் என சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் தெரிவித்தனர். கடலூர் ரவுடிக்கு கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் பரிசோதனை நடத்தப்பட உள்ளது. இந்த உண்மை கண்டறியும் சோதனைக்கு ஒரு ரவுடி மட்டும் சம்மதம் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News